கடத்தப்பட்ட மகனைத் தேடி கனடாவிலிருந்து இந்தியா சென்ற பெண்: சமீபத்திய தகவல்
கடத்தப்பட்ட தனது மகனைத் தேடி கனடாவிலிருந்து இந்தியா சென்ற பெண்ணொருவர், வெற்றிகரமாக மகனுடன் கனடாவுக்கு புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகனை இந்தியாவுக்குக் கடத்திச் சென்ற தந்தை
கனடாவின் ரொரன்றோவைச் சேர்ந்த கமீலா விலாஸ் போவாஸுக்கும் (31), இந்தியரான கபில் சுனக்குக்கும் பிறந்த மகன் வாலன்டினோ (4).
தம்பதியர் பிரிந்த நிலையில், 2024ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 18ஆம் திகதி, நீதிமன்றத்தின் அனுமதியுடன் தனது மகனை அழைத்துக்கொண்டு இந்தியா சென்றுள்ளார் கபில்.
அவர்கள் இருவரும் ஆகத்து மாதம் 8ஆம் திகதி கனடா திரும்பவேண்டிய நிலையில், கபில் தன் மகனுடன் இந்தியாவிலேயே தங்கிவிட்டார்.
அதைத் தொடர்ந்து, ரொரன்றோ பொலிசார் கபில் மீது கைது வாரண்ட் பிறப்பித்துள்ளார்கள்.
நாட்கள் கடந்து செல்ல, மகனை இனி பார்க்கவே முடியாமல் போய்விடுமோ என அஞ்சிய கமீலா, சமூக ஊடகங்கள் மற்றும் பலருடைய உதவியுடன், தனது மகன் வாலன்டினோவைத் தீவிரமாக தேடிவந்த நிலையில், அவர் வட இந்தியாவில் சண்டிகர் என்னும் நகரில் இருப்பது தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, ஜனவரி மாதம் 31ஆம் திகதி, தனது சட்டத்தரணிகளுடன் இந்தியா புறப்பட்டுவிட்டார்.
கமீலா நீதிமன்றத்தை அணுக, பிப்ரவரி மாதம் 6ஆம் திகதி, மகனுடன் நீதிமன்றம் வந்துள்ளார் கபில்.
ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி, மகனை கமீலாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் கபிலுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், கபில் மீண்டும் தங்கள் மகனைத் தூக்கிச் செல்ல, பொலிசார் அவரைத் தீவிரமாகத் தேட, கபில் சரணடைய, கபில் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய, கமீலாவால் கனடா திரும்பமுடியாமல் போயுள்ளது.
இந்நிலையில், கடந்த வியாழனன்று, அதாவது, மே மாதம் 22ஆம் திகதி, இந்திய உச்சநீதிமன்றம் கபிலின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, கமீலா தனது மகனுடன் கனடா செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
அதைத் தொடர்ந்து மகனுடன் கனடா புறப்படுகிறார் கமீலா. சமீபத்திய தகவலின்படி, இன்று கமீலாவும் வாலன்டினோவும் கனடா வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |