காட்டு நாய்கள் சூழ சுயநினைவிழந்து கிடந்த கனேடிய பெண் இவர்தான்: விவரங்கள் வெளியாகின
அவுஸ்திரேலியாவில் கனேடிய இளம்பெண் ஒருவர் சுயநினைவின்றிக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரை 12 காட்டு நாய்கள் சூழந்து நிற்பதை அங்குள்ள மக்கள் கண்டுள்ளார்கள்.
இந்நிலையில், அவரது பெயர், புகைப்படம் முதலான விவரங்கள் வெளியாகியுள்ளன.
சுயநினைவின்றிக் கிடந்த கனேடிய இளம்பெண்
திங்கட்கிழமை காலை 6.35 மணிக்கு, அவுஸ்திரேலியாவின் Fraser Island என்னும் K’gari என்னுமிடத்திலுள்ள கடற்கரை ஒன்றில், இளம்பெண்ணொருவர் சுயநினைவின்றிக் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

பொலிசாருடன் மருத்துவ உதவிக்குழுவினரும் அங்கு விரைந்த நிலையிலும், அவரைக் காப்பாற்ற இயலவில்லை, சிறிது நேரத்திற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.

யார் அந்தப் பெண்?
அந்தப் பெண்ணின் பெயர் பைப்பர் ஜேம்ஸ் (19). கனடாவின் வான்கூவர் தீவைச் சேர்ந்த ஏஞ்சலா ஜேம்ஸ், டோட் ஜேம்ஸ் தம்பதியரின் மகளான பைப்பர், அவுஸ்திரேலியாவை சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளார்.
தீயணைப்பு வீரராக பணியாற்றியது முதலான பல்வேறு சாகச செயல்களில் விருப்பமுடையவரான பைப்பர், அவுஸ்திரேலியாவில் கடலில் நீந்தச் சென்ற நிலையில், கடற்கரையில் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அவர் விழுந்து கிடந்த இடத்தில், அவரைச் சுற்றி dingoes என அழைக்கப்படும் 12 காட்டு நாய்கள் நிற்பதை மக்கள் கண்டுள்ளார்கள்.

அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்த நிலையில், அவர் நாய்களால் தாக்கப்பட்டதால் உயிரிழந்தாரா அல்லது தண்ணீரில் மூழ்கியதால் உயிரிழந்தாரா என்பதை அறிவதற்காக விசாரணை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |