பாத்ரூமைப் பார்த்தாலே அலறும் குழந்தை: திகைப்படைந்த பெற்றோர்
பெங்களூருவிலுள்ள பகல் நேரக் குழந்தைகள் காப்பகம் ஒன்றின் ஊழியர்கள், அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் போட்டு அடைப்பதாக வெளியான செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அந்த காப்பகத்தில் தங்கவைக்கப்பட்ட குழந்தைகள், தாங்கள் நடத்தப்பட்ட விதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
வாஷிங் மெஷினுக்குள் அடைக்கப்படும் குழந்தைகள்
பெங்களூருவில், வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளை கவனித்துக்கொள்வதற்காக விட்டுச் செல்லும் பகல் நேரக் காப்பகங்களில் ஒன்று, Capgemini பகல் நேரக் குழந்தைகள் காப்பகம்.

இந்நிலையில், குழந்தைகள் உதவி எண்ணுக்கு புகார் ஒன்று வந்துள்ளது. அதில், Capgemini காப்பகத்தில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதற்கு ஆதாரமாக வீடியோக்களும் இணைக்கப்பட்டுள்ளன.
பிள்ளைகளை கவனித்துக்கொள்வதற்காக பெற்றோர் அந்த காப்பகத்தை நம்பி அங்கு பிள்ளைகளை விட்டுச் செல்லும் நிலையில், அந்த காப்பகத்தில் பணி செய்யும் சில பெண்கள், அழும் குழந்தைகளின் அழுகையை அடக்குவதற்காக, குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் போட்டு மூடியுள்ளார்கள்.
சில குழந்தைகள் குளியலறைக்குள் அடைக்கப்படும் காட்சிகளும், டாய்லெட்டில் பயன்படுத்துவதற்கு பயன்படும் கை ஷவரைக் கொண்டு பிள்ளைகள் வாய்க்குள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் காட்சிகளும் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அதிரவைக்கும் அந்த தகவலைத் தொடர்ந்து, அந்த காப்பகத்தில் பணி செய்துவரும் மஞ்சுளா, விஜயலக்ஷ்மி, பவானி, சிந்து மற்றும் பிந்து என்னும் ஐந்து பெண்களை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
பாத்ரூமைப் பார்த்தாலே அலறும் குழந்தை
இந்நிலையில், அந்த காப்பகத்தில் தங்கவைக்கப்பட்ட குழந்தைகள், தாங்கள் நடத்தப்பட்ட விதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சில பிள்ளைகளின் பெற்றோர் தெரிவித்துள்ளார்கள்.

வெவ்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்துவரும் ஒரு தம்பதியர், தங்கள் குழந்தையை சம்பந்தப்பட்ட காப்பகத்தில் விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
அந்தக் காப்பகத்தில் விடத் துவங்கியதிலிருந்து, அந்த இரண்டரை வயது குழந்தை, பாத்ரூமுக்குள் நுழையவே அடம் பிடிக்கத் துவங்கியுள்ளதை அவளது பெற்றோர் நினைவுகூர்ந்துள்ளார்கள்.
குளிக்கவேண்டுமென்றாலோ, கழிவறைக்குச் செல்லவேண்டுமென்றாலோ, அழுவதும், குளிக்க மறுப்பதும், குளியலறையிலிருந்து தப்பியோட முயல்வதுமான அவளது நடவடிக்கைகளே மாறியுள்ளன.
எதனால் பிள்ளை இப்படி நடந்துகொள்கிறாள் என்பது புரியாமல் திகைப்படைந்திருந்த அவர்கள், இப்போது அந்த காப்பகம் தொடர்பில் வெளியான வீடியோக்களைப் பார்க்கும்போது, அவள் அடிக்கடி பாத்ரூமுக்குள் அடைக்கப்பட்டுள்ளதாலேயே பாத்ரூம் குறித்து அவளுக்கு பயம் உருவாகியுள்ளது என்பதை தாங்கள் புரிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், காப்பக ஊழியர்களில் ஒருவரான விஜயலக்ஷ்மி என்னும் பெண்ணை நீதிபதி முன் ஆஜர் செய்த நிலையில், அவர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |