கிறிஸ்துமஸ் அணிவகுப்பில் பகீர் சம்பவம்... தூக்கி வீசப்பட்ட மக்கள்: நடுங்கவைத்த காணொளி
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறை அணிவகுப்பின்போது கார் புகுந்த பகீர் சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டதுடன் சுமார் 40 பேர்கள் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்கான்சின் மாகாணத்தின் வௌகேஷா பகுதியிலேயே ஞாயிறன்று குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் ஐவர் கொல்லப்பட்டதுடன் 40 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாக பொலிஸ் தரப்பு தற்போது உறுதி செய்துள்ளது.
திரளான மக்கள் கிறிஸ்துமஸ் விடுமுறை அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே தொடர்புடைய சிவப்பு நிற SUV ஒன்று திகிலூட்டும் வகையில் உழன்று சென்றது. தொடர்ந்து மக்கள் தூக்கி வீசப்பட, அலறல் சத்தம் அப்பகுதி எங்கும் ஒலித்தது.
சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்த ஒருவர், தமது குடும்பத்தினரில் பெரும்பாலானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தமது மனைவியுடன் தாம் மட்டும் காயங்களின்றி தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு பிறகு ஊடகங்களிடம் பேசிய பொலிஸ் அதிகாரிகள், பலர் இறந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், ஆனால் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அவர்கள் உறுதி செய்த பின்னரே தகவல் வெளியிடப்படும் என்றனர்.
11 பெரியவர்களும் 12 சிறார்களும் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை என தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்கு பின்னர் குறித்த சிவப்பு நிற SUV-ஐ மீட்டுள்ளதாகவும், ஆனால் சாரதி தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை தற்போது கைது செய்துள்ளதாகவும், அவர் தொடர்பில் விசாரணைக்கு பின்னரே தகவல் வெளியாகும் என்றனர்.