தடம் புரண்ட பயணிகள் ரயில்... உயிர் பயத்தில் அலறிய மக்கள்: நூற்றுக்கணக்கானோர் நிலை?
எகிப்தில் கெய்ரோவின் வடக்கு வழியாக பயணிக்கும் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டதால் 100கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
எகிப்தின் கலியுபியா மாகாணத்தில் உள்ள பான்ஹா நகரத்திலேயே இந்த ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. மொத்தம் நான்கு பெட்டிகள் தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர்.
திடீரென்று ரயில் பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், உயிர் பயத்தில் அலறிய பயணிகள் பலர், பெரும் முயற்சிக்கு பின்னர் ஊர்ந்து வெளியேறியுள்ளனர்.
பயணிகளால் நிரம்பிய குறித்த ரயிலானது எகிப்திய தலைநகரிலிருந்து நைல் டெல்டா நகரமான Mansoura வுக்கு சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையிலேயே திடீரென்று ரயில் தடம் புரண்டுள்ளது. இதில் சுமார் 97 பேர் காயங்களுடன் தப்பியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல சுமார் 60 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
பெரும்பாலானவர்களுக்கு லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் இது மூன்றாவது ரயில் விபத்து என கூறப்படுகிறது.
கடந்த வாரம் நடந்த ரயில் விபத்தில் சுமார் 15 பேர் காயங்களுடன் தப்பிய சம்பவம் நினைவுகூரத்தக்கது.