நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு என அறிவித்த பா.ம.க மாவட்ட செயலாளர் மீது காவல்துறை வழக்குப்பதிவு!
நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ரூ 1 லட்சம் பரிசு என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க செயலாளர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்துக்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து உளவுதுறை அளித்த தகவல் காரணமாக சூர்யாவுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போது பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி பேசுகையில், ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூரியா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் நடிகர் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்றும், இந்த மாவட்டத்தில் சூரியாவின் எந்த படத்தையும் திரையிடுவதற்கு பாமக அனுமதிக்காது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் பரிசு என அறிவித்த பழனிச்சாமி மீது பொலிசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.