பிரித்தானிய குடும்பத்துக்கு உணவில் விஷம் வைக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம்: வழக்கில் முக்கிய திருப்பம்
பங்களாதேஷ் நாட்டுக்குச் சென்றிருந்த பிரித்தானியர்களான ஒரு தந்தையும் மகனும் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்த நிலையில், அவர்களுடைய உணவில் விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
Cardiffஐச் சேர்ந்த Rafiqul Islam (51) குடும்பத்தினர், இரண்டு மாத விடுமுறைக்காக பங்களாதேஷ் சென்றிருந்தனர். அங்கு, Sylhet என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து அவர்கள் தங்கியிருந்த நிலையில், சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கச் சென்ற குடும்பத்தினர் சுயநினைவிழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே, Rafiqul Islam மற்றும் அவரது மகனான Mahiqul (16) ஆகிய இருவரும் உயிரிழந்தார்கள்.
image - RUNNER MEDIA/BBC
Rafiqul குடும்பத்தினருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கினார்கள். ஆனால் Rafiqul மற்றும் அவரது மகனான Mahiqul ஆகிய இருவரின் முதல் கட்ட பிரேதப் பரிசோதனையில், அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், Rafiqulஉடைய மனைவியான Husnara (45), தம்பதியரின் மகனான Sadiqul (24) ஆகியோர் நேற்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.
தற்போது அவர்கள் தெரிவித்துள்ள ஒரு தகவல், வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
image - bbc
ஆம், Rafiqul குடும்பத்தினர் தங்கியிருந்த குடியிருப்பில், மின்சாரம் தடைபட்டால் பயன்படுத்துவதற்காக ஒரு பழைய ஜெனரேட்டர் இருந்துள்ளது. சம்பவ தினத்திற்கு முந்தைய இரவு Rafiqul குடும்பத்தினர் தூங்கும்போது மின்சாரம் தடைபட்டதாகவும், அப்போது அந்த ஜெனரேட்டர் இயக்கப்பட்டதாகவும் Husnaraவும் Sadiqulம் தெரிவித்துள்ளனர்.
அதை உறுதி செய்வதற்காக, வழக்கை விசாரித்து வரும் பொலிஸ் அதிகாரியான Supt Farid Uddin அந்த குடியிருப்புக்குச் சென்றுள்ளார். தான் அந்த ஜெனரேட்டரை இயக்கிப்பார்க்கும்போது அது பயங்கரமாக புகையைக் கக்கியதாக தெரிவித்துள்ள அவர், அந்த புகை மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆகவே, அந்த புகையால் மூச்சுத்திணறி, கார்பன் மோனாக்சைடு நச்சு காரணமாக Rafiqulம் அவரது மகனும் உயிரிழந்திருக்கலாம் என்ற கருத்து உருவாகியுள்ளது.
புகை மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதே புகையிலுள்ள ரசாயனம், உயிரிழந்தவர்கள் மற்றும் உயிர் தப்பிய Rafiqul குடும்பத்தினர் உடலிலும் உள்ளதா என்பதை அறிவதற்கான ஆய்வு தற்போது துவக்கப்பட்டுள்ளது.
image - bbc