கொரோனா தொற்றுவதிலிருந்து ஜலதோஷம் உங்களைக் காப்பாற்றலாம்: பிரித்தானியா ஆய்வாளர்கள் தகவல்
ஒருவருக்கு ஜலதோஷம் பிடித்தால், அது அவருக்கு கோவிட் - 19 தொற்றுவதிலிருந்து அவரைக் காப்பாற்றலாம் என சமீபத்திய ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
கோவிட் - 19 தொடங்கியதிலிருந்தே, பிற கொரோனா வைரஸ்கள், அதாவது மூக்கில் நீர் வடிதல் மற்றும் தொண்டை கரகரப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ்கள் சிறிது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடும் என நிபுணர்கள் கணித்துவந்தார்கள்.
ஆனால், தற்போது மனிதர்களிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு ஒன்று, ஜலதோஷத்தினால் உருவாகும் நோயெதிர்ப்பு சக்தி, கோவிட் - 19க்கு எதிராக போராட உதவும் என தெளிவான ஒரு ஆதாரத்தை அளித்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சாதாரணமாக பருவநிலை மாற்றங்களின்போது உருவாகும் கொரோனாவைரஸ் தொற்று, அதாவது ஜலதோஷம் போன்ற தொற்றுக்களின்போது மனித உடலில் உருவாகும் T cells எனப்படும் செல்கள், அவர்களை கோவிட் - 19ஐ உருவாக்கும் SARS-CoV-2 என்னும் கொரோனா வைரஸ் தொற்றுவதிலிருந்து பாதுகாப்பது தெரியவந்துள்ளது.
புரிந்துகொள்ளும் வகையில் எளிதாகக் கூறவேண்டுமானால், கொரோனா வைரஸ்களில் பல வகை உள்ளன. மூக்கில் நீர் வடிதல், தொண்டை கரகரப்பு ஆகிய பிரச்சினைகளை உண்டாக்கும் சில கொரோனா வைரஸ்களும் உள்ளன, கோவிட் - 19ஐ உருவாக்கும் கொரோனா வைரஸும் உள்ளது. இந்த கோவிட் - 19ஐ உருவாக்கும் கொரோனா வைரஸ் SARS-CoV-2 என்று அழைக்கப்படுகிறது.
ஆக, அந்த சாதாரண, அதாவது மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகளை உருவாக்கும் கொரோனா வைரஸ்கள் ஒருவரைத் தொற்றும்போது, அதாவது ஒருவருக்கு ஜலதோஷம் பிடிக்கும்போது என்று வைத்துக்கொள்வோம், அப்போது அவரது உடலில் அதிக அளவில் T cells உருவானால், அந்த குறிப்பிட்ட நபரை கோவிட் - 19 தாக்குவது கடினம் என்று வைத்துக்கொள்ளலாம்.
இந்த T cells என்பவை, மனிதனின் நோய் எதிர்ப்பு அமைப்பின் முக்கிய பாகமாகும். இவைதான், உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகளை வேட்டையாடி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவருக்கு ஜலதோஷம் பிடிக்கும்போதும், அவரது உடலில் இந்த T cells என்னும் செல்கள் உருவாகும்.
தற்போது, இந்த அரிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளவர்கள் லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள்.
கோவிட் - 19 தொற்றியவர்களுடன் வாழ்ந்த 52 பேரை இந்த ஆய்வாளர்கள் ஆய்வுக்குட்படுத்தினார்கள். அவர்களில் பாதி பேருக்கு கோவிட் - 19 தொற்றியது, மற்றவர்கள் தொற்றிலிருந்து தப்பிவிட்டார்கள்.
இந்த 52 பேரிடமிருந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அவர்கள் உடலில் T cell எந்த அளவில் உள்ளது என ஆராயப்பட்டது.
அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, அவர்களில் கொரோனா பரிசோதனையில் கோவிட் - 19 தொற்று இல்லை என்று தெரியவந்தவர்கள் உடலில் T cells என்னும் செல்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகம் காணப்பட்டது தெரியவந்தது.
ஆக, ஜலதோஷத்தால் உருவாகும் T cells என்னும் செல்கள், SARS-CoV-2 அல்லது கோவிட் - 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுவது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகத் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கிறார் ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் Ajit Lalvani.