பிரித்தானியாவில் பரவிய ஓமிக்ரான் தொற்று... இஸ்ரேல் மருத்துவர் வெளிப்படை
உலகில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் சிலரில் ஒருவரான இஸ்ரேலிய மருத்துவர், தமக்கு லண்டனில் வைத்து தொற்று பாதித்ததாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் டெல் அவிவ் அருகே ஷெபா மருத்துவ மையத்தில் இருதயநோய் நிபுணராக பணியாற்றும் எலாட் மாயர் என்ற மருத்துவ்ரே, தமக்கு ஓமிக்ரான் தொற்று பாதித்தது தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
லண்டனில் நவம்பர் 21 மற்றும் 23ம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கருத்தரங்கம் ஒன்றில் மருத்துவர் எலாட் மாயர் பங்கேற்றுள்ளார். குறித்த கருத்தரங்கில் 1250 பேர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணிந்திருக்கவில்லை என்றே கூறப்படுகிறது. மருத்துவர் மாயர் குறிப்பிடுகையில், உலக மக்களுக்கு தெரியவரும் முன்னரே, பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் ஓமிக்ரான் தொற்றானது பரவியிருந்துள்ளது என்றார்.
செவ்வாய்க்கிழமை நெதர்லாந்து அதிகாரிகள் தரப்பு, தங்கள் நாட்டில் ஏற்கனவே ஓமிக்ரான் தொற்றானது வியாபித்திருந்தது என்பதை உறுதி செய்துள்ள நிலையிலேயே, மருத்துவர் மாயர் தமது அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் உலக சுகாதார அமைப்பானது, ஓமிக்ரான் தொற்றானது தென்னாபிரிக்காவில் முதன்முதலாக காணப்பட்டதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, குறித்த தொற்றின் தோற்றம் தொடர்பில் குழப்பமான கருத்துகள் வெளிவரும் நிலையில் மருத்துவர் மாயரின் கருத்து மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பீதியையும் உருவாக்கியுள்ளது.
தற்போது ஸ்ரேலில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள மருத்துவர் மாயர், பிரித்தானியாவில் இருந்தே தமக்கு ஓமிக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக உறுதியாக நம்புகிறார்.
மூன்று டோஸ் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள மருத்துவர் மாயர் நவம்பர் 19ம் திகதி லண்டனில் வந்துள்ளார். வடக்கு லண்டனில் உள்ள இஸ்லிங்டனில் ஹொட்டல் ஒன்றில் நான்கு இரவுகள் தங்கியுள்ளார்.
பின்னர் கருத்தரங்கை முடித்துக் கொண்டு நவம்பர் 23ம் திகதி இஸ்ரேல் திரும்பியுள்ளார். ஆனால் நவம்பர் 27ம் திகதி அவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
மருத்துவர் மாயர் லண்டனில் தங்கியிருந்த நாட்களில் அவர் சுரங்க ரயில் பாதையை பயன்படுத்தியுள்ளார். அப்போது எவருமே மாஸ்க் அணிந்து கொள்ளாதது தமக்கு மிகுந்த வியப்பை அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.