கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து
கோவையில் மாணவி மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில், சம்பந்தப்பட்ட பெண் மீது தான் முதல் தவறு என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்த கருத்துக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
கோவை கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை
கடந்த நவம்பர் 2ம் திகதி பீளமேடு விமான நிலையத்திற்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் கோவை தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய நண்பர்களுடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள், காரின் கண்ணாடியை உடைத்து ஆண் நண்பர்களை தாக்கியுள்ளனர்.
அத்துடன் அவர்களுடன் இருந்த கல்லூரி மாணவியை மூன்று பேரும் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய நிலையில், குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று இரவு கோவை துடியலூர் பகுதியில் பதுங்கியிருந்த 3 குற்றவாளிகளையும் பொலிஸார் சுட்டு பிடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சர்ச்சை கருத்து
இந்நிலையில் கோவையில் மாணவி மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில் “மாணவி மீது தான் முதல் தவறு” என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில், 1. கோவை விமானநிலையத்தின் பின்புறம் இந்தக் கொடுமை நிகழ்ந்ததாக அந்த இடத்தைத் தொலைக்காட்சியில் காண்பித்தபோது அந்தப் பெண் மீதும், அவளது ஆண் நண்பன் மீதும் கோபம் வந்தது. பகலிலேயே ஆள்நடமாட்டமற்ற திகிலான அந்த இடத்திற்கு இரவு நேரத்தில் அவர்கள் போனது தவறு.
2. முதலில், அந்தப் பெண் தவறு.
இவ்வளவு தனிமையான இடத்திற்கு எப்படிப் போகலாம்?
பகலில் ஊருக்கு நடுவில் தெருவில் நடந்துபோகும்போதே கைபேசியைப் பிடுங்கிகொண்டு ஓடுவதும், கழுத்துச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுவதும் சாதாரணமாகிவிட்ட காலத்தில் இந்த இடத்துக்கு, இரவில், எப்படி ஒருவனுடன் செல்லலாம்?
3. இரண்டாவது, அந்தப் பையன் தவறு.
அவ்வளவு தனிமையான இடத்துக்கு இரவில் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு போனால், அவளைக் காப்பாற்றக்கூடிய திராணி இருக்கவேண்டும். நிச்சயமாக அந்த இடத்தை இவன்தான் அவளுக்கு அறிமுகப்படுத்தி இருக்கமுடியும். இப்போது அவள் இழந்ததை அவன் மீட்டுத்தர முடியுமா?
4. அந்த மூன்று முட்டாள்களுக்கும் ஆளுக்கு மூன்று நிமிடங்கள் ஒரு அரைகுறை இன்பம் கிடைத்திருக்கும். ஆனால் அவர்களது வாழ்க்கையே முடிந்துபோனதல்லாவா இப்போது! இனி அழுது பயனில்லை.
5. ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொள்வார்கள். மனம்நொந்து அழுவார்கள். பெற்றோரையும் மற்றோரையும் நேருக்குநேர் பார்க்கமுடியாமல் குனியும் அவர்கள் தலை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிமிராது.
6. இதைப்போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர் யாரும் சிக்காமல் தப்பிக்கவேமுடியாது. மாட்டித்தான் ஆவார்கள்.
7. இதை வாசிக்கிறவரில் இதைப்போன்ற வக்கிர சிந்தனையுள்ளவனும் இருப்பாய். எதிர்காலத்தில் இதைப்போல எதையாவது செய்துவிட்டு வருத்தப்படாதே. பெண்ணின் நலனைக்குறித்து கூட நீ சிந்திக்கவேண்டாம். உன் நலனுக்காக இதைப்போன்ற செயல்களில் ஈடுபடாதே. நீ சிறையில் தனிமையில் வருந்தி வருந்தி அழுதாலும், உன் வாழ்க்கை உனக்குத் திரும்பக் கிடைக்காது.
8. தவறான நண்பனைத் தவிர்” என பதிவிட்டுள்ளார்.
"VALUE JUDGEMENT பாஸ் பண்ணாதீங்க. எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கிறது" பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதுதான் தவறு என சிலர் நரேட்டிங் செட் செய்கிறார்களே என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு கோவை காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் பதில்#KovaiSP | #Kovai | #SexualHarassment | #Coimbatore | #MKStalin… pic.twitter.com/FcSB3UvLTa
— PttvOnlinenews (@PttvNewsX) November 4, 2025
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்துக்கு கண்டனம்
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்துக்கு இணையத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் மீது குற்றம் சுமத்தப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கோவை காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் "VALUE JUDGEMENT பாஸ் பண்ணாதீங்க. எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |