பிரித்தானியாவில் இளம்பெண்ணை துஷ்பிரயோகம் செய்த புகலிடக்கோரிக்கையாளர்: சிசிடிவி கமெராவில் நேரடியாக கண்டு பதறிய பாதுகாவலர்
வேல்ஸ் நாட்டிலுள்ள அரசு அலுவலகம் ஒன்றில் பாதுகாவலராக பணிபுரிந்த ஒருவர், சிசிடிவி கமெராக்களை கண்காணித்துக்கொண்டிருந்தபோது, ஒரு இளம்பெண்ணை ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதைக் கவனித்துள்ளார்.
கண் முன்னே இளம்பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கண்டு பதறிய Richard Arnold என்னும் அந்த பாதுகாவலர், உடனடியாக அலுவலக ஒலிபெருக்கியை எடுத்து, விடு அவளை, பொலிசாரைக் கூப்பிடுகிறேன் என சத்தமிட்டுள்ளார், உடனடியாக பொலிசாருக்கும் தகவலளித்துள்ளார்.
நடந்தது என்னவென்றால், Turkey Al-Turkey (26) என்ற அந்த நபரும், பல்கலைக்கழக மாணவியான அந்த பெண்ணும் டேட்டிங் சென்றிருக்கிறார்கள். Al-Turkey, அந்த பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக அவரது குளிர்பானத்தில் போதைப்பொருளைக் கலந்திருக்கிறான்.
அந்த பெண் அதை அருந்தி சுயநினைவிழந்து கிடந்தபோது அவளை அவன் துஷ்பிரயோகம் செய்திருக்கிறான். அதை அரசு அலுவலகம் ஒன்றிலிருந்த சிசிடிவி கட்டுப்பாட்டு அலுவலரான Richard, சிசிடிவி கமெராவுடன் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் தற்செயலாக கவனித்துவிட்டார்.
அவர் சத்தமிடவும், தான் கண்காணிக்கப்படுவதை உணர்ந்த Al-Turkey, ஒன்றும் தெரியாததுபோல் அந்த பெண்ணை தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டிருக்கிறான். இந்த சம்பவம் நள்ளிரவில் நடைபெற்ற நிலையில், சம்பவ இடத்துக்கு 1.40 மணியளவில் பொலிசார் வந்துள்ளனர்.
பொலிசாரிடம், அந்த பெண் தன் காதலி என்றும், அவள் தூக்குகிறாள் என்றும் கூறியிருக்கிறான் Al-Turkey.
பாதிக்கப்பட்ட அந்த பெண், மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த என்னை அவன் கொன்றுவிட்டான். இந்த பாதிப்பு வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கப்போகிறது. ஒரே நிம்மதியான விடயம், அவன் கைது செய்யப்பட்டுவிட்டான், இனி அவனால் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதுதான் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அவர் முற்றிலும் சுயநினைவில்லாமல் கிடந்த நிலையில், நடந்த எதுவுமே அவருக்குத் தெரியாது. சிசிடிவி கட்டுப்பாட்டு அலுவலரான Richard, நடந்ததை கூறியதால்தான் அந்த பெண்ணுக்கு தான் பாதிக்கப்பட்டதே தெரியும். இந்நிலையில், தான் கண்ட காட்சி, தொடர்ந்து தன் கண் முன் தோன்றி தன்னை கஷ்டப்படுத்துவதாக Richard தெரிவித்துள்ளார்.
ஈராக்கைச் சேர்ந்த Al-Turkey, 2108ஆம் ஆண்டு பிரித்தானியாவிலுள்ள Croydonஇல் புகலிடம் கோரியவன் என்பது குறிப்பிடத்தக்கது.
அவனுக்கு எட்டு ஆண்டுகள், எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் அவனது பெயர் சேர்க்கப்பட உள்ளது. அத்துடன், அவனது தண்டனைக்காலம் முடிந்ததும் அவனை நாடுகடத்துமாறும் Swansea நகர Crown நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.