தொற்று பரவல்... கனடாவின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கை
அதிகம் பரவக்கூடிய நோய் ஒன்று பரவுவதன் காரணமாக, கனடாவின் சில பகுதிகளுக்கு அமெரிக்க சுகாதார அதிகாரிகள் அவசரப் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில்
ஹெபடைடிஸ் ஏ நோய் பரவல் காரணமாக, கனடாவின் மனிடோபா மாகாணத்திற்குச் செல்லும் அமெரிக்கர்களுக்கு சிடிசி நிலை 1 பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ஹெபடைடிஸ் ஏ நோய் என்பது அசுத்தமான உணவு மற்றும் பானங்கள் மூலமாகவும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடியதுமான ஒரு கல்லீரல் தொற்றாகும். ஏப்ரல் 2025-ல் இந்த நோய் பரவல் தொடங்கியதிலிருந்து, மனிடோபாவைச் சேர்ந்த 658 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் மற்றும் 142 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாகாண சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஐந்து பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 143 பேர் மனிடோபாவின் தலைநகரான வின்னிபெக்கைச் சேர்ந்தவர்கள்; சுமார் 850,000 மக்கள் வசிக்கும் இந்நகரம் கனடாவின் ஏழாவது மிகப்பெரிய நகரமாகும். ஒவ்வொரு ஆண்டும் 1,600 முதல் 3,300 அமெரிக்கர்களையும், சுமார் 250 கனடியர்களையும் பாதிக்கும் இந்த நோய் குறித்து சுகாதார அதிகாரிகள் ஏற்கெனவே எச்சரித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் தென்பட 28 நாட்கள் ஆகும் என்பதால், அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே, மக்கள் ஏறக்குறைய ஒரு மாத காலத்திற்கு நெரிசலான சூழல்களில் மற்றவர்களை அறியாமலேயே நோய் பரவ காரணமாகக் கூடும்.
ஹெபடைடிஸ் ஏ அறிகுறியற்றதாக இருக்கலாம், ஆனால் அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு பலவீனம், திடீர் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, களிமண் நிற மலம், அடர் நிற சிறுநீர் மற்றும் மூட்டு வலி போன்றவை ஏற்படலாம்.
இந்நோய் தோல் அல்லது கண்களில் அரிப்பு மற்றும் மஞ்சள் காமாலையையும் ஏற்படுத்தக்கூடும்; இவை கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாகும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பெரும்பாலானோர் தாங்களாகவே குணமடைந்தாலும், ஹெபடைடிஸ் ஏ கடுமையான அழற்சியால் ஏற்படும் ஒரு அரிய வகை கல்லீரல் செயலிழப்பான ஃபுல்மினன்ட் ஹெபடைடிஸுக்கு வழிவகுக்கலாம்.
இரத்தத்தில் உள்ள நச்சுக்களைக் கல்லீரலால் தொடர்ந்து வடிகட்ட முடியாதபோது, அந்தப் பொருட்கள் உடலில் தேங்கி, மூளை போன்ற முக்கிய உறுப்புகளுக்குச் செல்கின்றன. வயதானவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் கடுமையான நோய்க்கு ஆளாகும் அதிக அபாயத்தை எதிர்கொள்ளலாம்.
சிடிசி-யின் நிலை 1 பயண எச்சரிக்கையானது, மனிடோபாவிற்குச் செல்லும்போது அமெரிக்கர்கள் வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகிறது.

அதாவது, கைகளைத் தவறாமல் கழுவுதல், ஊசிகள் அல்லது சிரிஞ்சுகளைப் பகிர்வதைத் தவிர்த்தல் மற்றும் உடலுறவின்போது ஆணுறைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
அத்துடன், ஹெபடைடிஸ் ஏ தொடர்பான தடுப்பூசியை எடுத்துக்கொள்ளவும் சிடிசி பரிந்துரைத்துள்ளது. இந்த ஊசி பொதுவாக 12 முதல் 23 மாத வயதுடைய குழந்தைகளுக்கு ஒரு முறையும், அதன்பிறகு 6 முதல் 18 மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு முறையும் செலுத்தப்படுகிறது.
கனடாவில், ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசியானது குழந்தை பிறந்த ஆறு முதல் 12 மாதத்தில் ஒரு முறையும், அதன்பின்னர் ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு முறையும் செலுத்தப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |