மீண்டும் முக கவசம் கட்டாயம்: தளர்வை வாபஸ் வாங்கிய அமெரிக்கா
அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுத்திருக்கும் நிலையில், முக கவசம் அணிவது அங்கு மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உலகில் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட வல்லரசு நாடான அமெரிக்காவில் தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளது.
தினசரி 50,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்புக்களும், 250-க்கும் அதிகமான உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றன.
புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க் ஆகிய மாகாணங்களில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
இந்தியாவில் கண்டறியப்பட்ட 'டெல்டா' வகை உருமாறிய கொரோனா வைரஸ் கைவரிசை காட்ட தொடங்கியிருக்கும் நிலையில், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பழக்கங்கள் மக்கள் மத்தியில் குறைவதும் பாதிப்பு அதிகரிப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
தடுப்பூசி போடுவதில் ஏற்பட்டுள்ள மந்தமான சூழலும் மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது.
கொரோனா விவகாரத்தில் நாடு தவறான பாதையில் போகிறது என எச்சரித்திருக்கும் அதிபர் ஜோ பைடனின் மருத்துவ ஆலோசகர் மருத்துவர் ஆண்டனி பாவுசி, தடுப்பூசி செலுத்துதலை அதிகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் மொத்த மக்கள் தொகையில் 49 சதவீதத்தினர் இரு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டு விட்டனர்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களிடம்தான் பரவல் அதிகரித்துள்ளதாகவும் ஆண்டனி பாவுசி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஏப்ரலில் தடுப்பூசி செலுத்தியவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என விலக்கு அளிக்கப்பட்டது.
தற்போது டெல்டா வைரஸ் அதிகமாக பரவும் சூழலில், தடுப்பூசியை செலுத்தியோர் மூலமாக வைரஸ் மற்றவர்களுக்கு பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில், பாதிப்பு அதிகமாக காணப்படும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் முகக்கவசத்தை அணிய வேண்டும் என்றும் பள்ளிகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும்
மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையம் Centers for Disease Control and Prevention (CDC)
அறிவுறுத்தியுள்ளது.