ரூ.324,000 கோடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி... பிரித்தானியாவின் உயரிய விருது வாங்கிய இந்தியர்
பிரான்சின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான Chanel நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருபவர் லீனா நாயர்.
உயரிய விருது
சமீபத்தில் பிரித்தானியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான Commander of the Order of the British Empire (CBE) என்ற விருதை பட்டத்து இளவரசர் வில்லியம் கைகளால் பெற்றுக்கொண்டார்.
சில்லறை விற்பனை மற்றும் நுகர்வோர் துறைக்கு சிறந்த பங்களிப்புகளை வழங்கியுள்ளதை கருத்தில் கொண்டு 56 வயதான லீனா நாயருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் பிறந்த லீனா நாயர், அங்குள்ள ஹோலி கிராஸ் கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்னர் அவர் சாங்லி நகரில் உள்ள வால்சந்த் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பயின்றார்.
பின்னர் ஜாம்ஷெட்பூரில் உள்ள சேவியர் மேலாண்மைப் பள்ளியில் (XLRI) மனிதவளத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) முடித்தார். 1992ல் எம்பிஏ முடித்த லீனா நாயர் தொடர்ந்து இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) நிறுவனத்தில் பயிற்சியாளராக சேர்ந்தார், அங்கு அவர் பல பொறுப்புகளில் செயல்பட்டார்.
இறுதியில் அவர் யூனிலீவரின் தலைமை மனிதவள அதிகாரியாக பொறுப்புக்கு வந்தார். இளம் வயதில் அதுவும் அந்த பொறுப்புக்கு வரும் முதல் பெண்மணியாக லீனா நாயர் அறியப்பட்டார்.
முதல் இந்திய வம்சாவளி நபர்
2022ல் அங்கிருந்து விலகிய அவர் பிரான்ஸ் நிறுவனமான Chanel-ல் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்புக்கு வந்தார். ரூ.324,000 கோடி மதிப்புள்ள Chanel நிறுவனத்தில் CEO பொறுப்புக்கு வரும் முதல் இந்திய வம்சாவளி நபர் லீனா நாயர் ஆவார்.
கடந்த பல ஆண்டுகளில் லீனா நாயர் பல மதிப்புமிக்க விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். 2021 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில், ஃபார்ச்சூன் இந்தியா பத்திரிகையின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் அவர் இடம் பெற்றுள்ளார்.
இது தவிர ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் மிகவும் சக்திவாய்ந்த வணிகத்துறையில் பெண்கள் பட்டியலில் இடம் பெற்றார். தற்போதைய தரவுகளின் அடிப்படையில் லீனா நாயரின் சொத்து மதிப்பு சுமார் ரூ 342 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |