இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரின் வாழ்வையே மாற்றும் ஒரு திட்டம்: ஜேர்மனி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ஜேர்மனியில் புதிதாக ஆட்சி அமைக்கும் கட்சிகள் ஜேர்மன் குடியுரிமை தொடர்பில் முக்கிய திட்டம் ஒன்று குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
அதாவது, இதுவரை, ஒருவர் ஜேர்மன் குடியுரிமை பெறவேண்டுமானால், (பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாட்டவர்கள்) தாங்கள் முதலில் கொண்டிருந்த குடியுரிமையைக் கைவிடவேண்டும்.
ஆனால், தற்போது ஜேர்மனியில் புதிதாக பொறுப்பேற்கும் அரசியல் கட்சிகள், இனி மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குடியுரிமைகள் வைத்துக்கொள்ள அனுமதிப்பது குறித்த திட்டங்களை அறிவித்துள்ளன.
இந்த முடிவு, ஜேர்மனியில் வாழும் இலட்சக்கணக்கான ஐரோப்பிய ஒன்றிய நாட்டவரல்லாத புலம்பெயர்வோரின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஜேர்மனியில் வாழும் பலர், ஜேர்மனியில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்தும், குடியுரிமையும் பெறாமல், அல்லது வேறு வகையில் சொன்னால், தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை பெறாமல் வாழ்ந்துவந்தனர்.
குறிப்பாக, பிரெக்சிட்டுக்குப் பிந்தைய கடுமையான விதிகள் காரணமாக பிரித்தானியர்கள், மற்றும், 1950, 60களில் ஜேர்மனிக்கு வேலைக்கு வந்த துருக்கியர்களின் குடும்பத்தினர் உட்பட, புலம்பெயர்ந்தோர் பலருக்கு இந்த விடயம் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.