சென்னை ஐஐடி கல்லூரியில் உடல் கருகி சடலமாக கிடந்த இஸ்ரோ ஊழியரின் மகன்! கொலையா?
சென்னை ஐஐடி கல்லூரியில் தற்காலிக ஊழியர் உடல் கருகி சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஐடி கல்லூரி வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்திற்கு அருகே கருகி நிலையில் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த விளையாட்டுத்துறை அதிகாரி பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பொலிசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் (30) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் கேரளாவில் பி.டெக் படிப்பை முடித்துவிட்டு 2021 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐ.ஐ.டி-யில் பிராஜெக்ட் அசோசியெட்டாக சேர்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
உன்னிகிருஷ்ணனின் தந்தை இஸ்ரோவில் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
உன்னிகிருஷணன் சென்னை வேளச்சேரியில் இரண்டு நண்பர்களுடம் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் உன்னிகிருஷ்ணன் தங்கியிருந்த வேளச்சேரி வீட்டில் பொலிசார் ஆய்வு செய்த போது11 பக்கம் கொண்ட தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது.
அதில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக அவர் எழுதி இருப்பதாக தெரியவந்துள்ளது..