ஈழப்பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி ரூ 70 லட்சம் பறித்தது நடிகர் ஆர்யா இல்லை இவர்கள் தான்! யாரும் எதிர்பார்க்காத தலைசுற்றவைக்கும் திருப்பம்
நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் பண மோசடி செய்தார் என ஈழப்பெண் கொடுத்த புகாரில் அதிரடி திருப்பமாக ஆர்யாவுக்கு இந்த விடயத்தில் சம்பந்தமே இல்லை என தெரியவந்துள்ளது.
மேலும் ஆர்யா பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி ஜேமனியை சேர்ந்த ஈழத்தமிழ் பெண்ணை காதலித்து ஏமாற்றியதோடு, 70 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த பெண் விட்ஜா, ஜேர்மனியில் குடியுரிமை பெற்று அங்குள்ள சுகாதாரதுறையில் பணிப்புரிந்து வருகிறார். நடிகர் ஆர்யா 70 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக குடியரசு தலைவர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக விட்ஜா கடந்த பிப்ரவரி மாதம் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் நடிகர் ஆர்யாவுடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்தும், கொரோனாவில் பணக்கஷ்டத்தில் இருப்பதாக தெரிவித்து தன்னிடம் 70லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலமாக பெற்று கொண்டு ஏமாற்றியதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கானது மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. ஆர்யாவுக்கு பணம் அனுப்பியதாக கூறப்பட்ட வங்கி கணக்கு, மெசேஜ்கள் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து சைபர் கிரைம் பொலிசார் விசாரணை நடத்தினர்.
மேலும் நடிகர் ஆர்யா கடந்த 10ஆம் திகதி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அப்போது அவரது செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில் விட்ஜாவுக்கு எந்த விதமான மெசேஜும், செல்போன் அழைப்புகளும் ஆர்யா செல்போன் எண்ணிலிருந்து செல்லவில்லை என்பதும், அவருக்கும் ஆர்யாவுக்கும் தொடர்பில்லை எனவும் தெரியவந்தது.
இதையடுத்து குற்றவாளிகளை தேடும் பணியில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அர்மான், மற்றும் உசைனி ஆகியோர் தான் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் விசாரித்த போது நடிகர் ஆர்யாவின் பெயரில் பேஸ்புக்கில் போலியாக கணக்கு ஒன்றை தொடங்கி அதில் வலியவந்து சிக்கும் பெண்களிடம் ஆசைவார்த்தைக்கூறி பழகி பணம் பறித்து வந்துள்ளனர்.
அந்தவகையில் ஜேர்மனியை சேர்ந்த விட்ஜாவிடம் ஆர்யா போல பேசி பழகியதோடு, தான் பணக்கஷ்டத்தில் இருப்பதாக கூறி அவ்வபோது கொஞ்சம் கொஞ்சமாக வெஸ்டர் யூனியன் மணிடிரான்ஸ்பர் மூலமாக பணம் பறித்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த மோசடி பாய்ஸ் பயன்படுத்திய செல்போனின் எண்ணை ட்ரூ காலரில் பரிசோதித்தால் ஆக்டர் ஆர்யா என்று பெயர் வரும் அளவிற்கு முன் ஏற்பாடுகளை செய்திருந்ததால் அந்த பெண்ணும் தன்னுடன் சாட்டிங் செய்வது உண்மையிலேயே நடிகர் ஆர்யா தான் என்று முழுமையாக நம்பியுள்ளார்.
மேலும் அந்த பெண்ணை ஏமாற்றி பணம் பெற்றுக் கொண்டதோடில்லாமல் நடிகை சாயிஷாவை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாக வாட்ஸ் அப்பில் கதை அளந்து போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற சொன்ன கூத்தும் அரங்கேறி உள்ளது.
மைத்துனரான முகமது ஹூசைனி ஹர்மானுக்கு உடந்தையாக இருந்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும் இன்னும் எத்தனை பேரிடம் ஆர்யாவின் பெயரை தவறாக பயன்படுத்தி பணம் பறித்துள்ளனர் என பொலிசார் விசாரித்து வருகின்றனர். நடிகர் ஆர்யாவுக்கும் இந்த இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் ஆர்யா தொடர்ந்து அமைதிகாத்ததால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.