ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண்
காதலனை பழி வாங்க 11 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதல் தோல்வி
சென்னையை சேர்ந்த 30 வயதான ரெனே ஜோஷீல்டா(Rene Joshilda) என்ற பெண், சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் ரோபோடிக்ஸ் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
நிறுவன பணி தொடர்பாக ரெனே பெங்களூருவிற்கு சென்ற போது, அதே நிறுவனத்தில் பணியாற்றிய திவிஜ் பிரபாகர் (Divij Prabhakar) என்பவர் மீது ஒருதலை பட்சமாக காதல் வயப்பட்டுள்ளார்.
ஆனால் அந்த காதலை ஏற்காத திவிஜ் பிரபாகர், கடந்த பிப்ரவரி மாதம் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
11 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இதனால், திவிஜ் பிரபாகரை பழிவாங்க துடித்த ரெனே, அவரது பெயரில் போலி மின்னஞ்சல்களை உருவாக்கி பல்வேறு மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
அவர் மிரட்டல் விடுத்த மாநிலங்களில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, கேரளா, பீகார், தெலுங்கானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகியவை அடங்கும்.
நரேந்திர மோடி மைதானம் உட்பட அகமதாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 21 இடங்களை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதாக ரெனே மிரட்டல் விடுத்துள்ளார்.
குறிப்பாக விஐபிகளின் வருகை மற்றும் பொது கூட்ட ஊர்வலம் போன்ற நேரங்களில் இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை ரெனே அனுப்பியுள்ளார். இந்த மிரட்டல்கள் புரளியா என்பதை கண்டறிய காவல்துறை பெரும் படையை பயன்படுத்த நேரிட்டது.
ஏர் இந்தியா விமான விபத்து
முக்கியமாக அஹமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் மருத்துவ கல்லூரி மீது மோதி விபத்தை சந்தித்தில் 274 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தையடுத்து, கல்லூரி நிர்வாகத்திற்கு ரெனே அனுப்பிய மின்னஞ்சலில், இப்போது உங்களுக்கு எங்களின் சக்தி தெரியும் என்று நினைக்கிறேன். நேற்று உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது போல, எங்கள் முன்னாள் முதல்வர் (விஜய் ரூபானி) உடன் ஏர் இந்தியா விமானத்தை மோதினோம்.
எங்கள் விமானிக்கு வாழ்த்துக்கள். இப்போது நாங்கள் விளையாடவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்" என குறிப்பிட்டுள்ளார்.
சிக்கியது எப்படி?
ரெனே தனது தனது தொழில்நுட்ப நிபுணத்துவம் காரணமாக, மின்னஞ்சல் மூலம் மிரட்டல்களை அனுப்பும் போது டோர் இணைய உலாவி மற்றும் டார்க் வெப் பயன்படுத்தி, தன்னை காவல்துறை கண்டுபிடிக்க முடியாதபடி தடயங்களை மறைத்துள்ளார்.
ஆனால் 6 மாதத்திற்கு முன்னர் அவர் செய்த சிறிய தவறால், சைபர் க்ரைம் காவல்துறை அவரை கண்டுபிடித்துள்ளது.
6 மாதத்திற்கு முன்னர், தனது உண்மையான மற்றும் போலி மின்னஞ்சல் கணக்குகளை ஒரே சாதனத்திலிருந்து உள்நுழைந்ததை வைத்து அவரது ஐபி முகவரியை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதன் மூலம், சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்த காவல்துறையினர், வீட்டில் இருந்து மிரட்டலுக்கு பயன்படுத்திய சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் பதிவுகளை கைப்பற்றியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |