சென்னையில் இளைஞரை கண்டந்துண்டமாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூரம்! மூவர் கைது..
சென்னையில் பட்டதாரி இளைஞரை வீடு புகுந்து கடத்தி கொலை செய்து அடையாற்றின் முகத்துவாரத்தில் வீசிய நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.
தமிழகத்தில், சென்னை அபிராமபுரம் அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவருக்கு 25 வயதில் மகேஸ்வரன் என்ற மகன் உள்ளார்.
மகேஸ்வரன், கடந்த சமனிக்கிழமை (செப்டம்பர் 4) அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேருடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அன்று இரவு தனது மகன் வீடு திரும்பாததால் பஞ்சவர்ணம் அபிராமபுரம் காவல் நிலையத்தில் தனது மகன் மகேஸ்வரனை காணவில்லை என புகார் அளித்தார்.
இது தொடர்பாக அபிராமபுரம் பொலிஸார் மகேஸ்வரனை தேடி வந்த நிலையில், செவ்வாய்கிழமை காலை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் அருகே அடையாறு முகத்துவாரம் பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட சடலத்தை கைப்பற்றி காணாமல் போன நபர்களின் அடையாளங்களோடு ஒப்பிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், இன்று அவர் அணிந்திருந்த உடையை வைத்து மகேஸ்வரனின் தாயார் பஞ்சவர்ணம் இறந்துபோனது மகேஸ்வரன் தான் என்பதை உறுதி செய்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை அன்று மகேஸ்வரனை வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து கொண்டு சென்ற நபர்கள் மீது இருந்த பழைய வழக்கங்களின் அடிப்படையிலும் இது கொலையாக இருக்கலாம் என விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, மகேஸ்வரனை அழைத்துச் சென்ற இரண்டு பேரில் கார்த்திக் என்ற நபரை அபிராமபுரம் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மற்றொரு நபரையும் அபிராமபுரம் பொலிஸார் தொடர்ந்து தேடி வரும் நிலையில் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துகின்றனர்.
பணத்திற்காக தனது மகனை கடத்தி கொலை செய்து இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொலை செய்யப்பட்ட இளைஞரின் தாயார் புகார் அளித்துள்ளார்.
குடிபோதையில் கொலை செய்து, ஆற்றில் வீசியதாக கைதான நபர் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்து வரும் நிலையில் அபிராமபுரம் பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.