தூக்கமில்லாமல் தவிக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் - என்ன காரணம்?
தூக்கமில்லாமல் தவிக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.
இரவு நேர வெப்பத்தால் தூக்க இழப்பு
உலகளவில் காலநிலை மாற்றம் அதிகரித்து வரும் நிலையில், அதனால் ஏற்பட உள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், புவி வெப்பமாதல் காரணமாக இரவு நேர வெப்பத்தால் ஏற்படும் தூக்க இழப்புகள் குறித்து கிளைமேட் சென்ட்ரல் என்ற அமைப்பு உலகளவில் ஆய்வு நடத்தியுள்ளது.

இந்த ஆய்வு குறித்த அறிக்கையை 'காலநிலை மாற்றம் மக்களுக்குச் செலவை ஏற்படுத்துகிறது (2020-2025)' என்று வெளியிட்டுள்ளது.
உலகளவில், 2020 மற்றும் 2025 ஆண்டுக்கு இடையில், இரவு நேர வெப்பம் காரணமாக ஒரு சராசரி நபர் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 56 மணிநேர தூக்கத்தை இழந்துள்ளார்.
அந்த வருடாந்திர தூக்க இழப்பில், மதிப்பிடப்பட்ட 6 மணிநேரம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பமயமாதலின் காரணமாக ஏற்படுகிறது.
இதில் உலகளவில் மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்கள், அதிக தூக்க இழப்பை எதிர்கொள்கின்றனர்.
அதிகரித்த இரவு நேர வெப்பநிலையால் ஆண்டுதோறும் 55 முதல் 87 மணிநேர உறக்கத்தை இழந்ததாகவும், இதில் 12 முதல் 16 மணிநேர உறக்க இழப்பு காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தூக்க இழப்பில் சென்னை முதலிடம்
இந்தியாவில், உள்ள பெருநகரங்களில் சென்னை அதிக தூக்க இழப்பை எதிர்கொள்ளும் நகரமாக உள்ளது. சென்னையில் வசிப்பவர்கள் ஆண்டுக்குச் சராசரியாக 93 மணிநேரத் தூக்கத்தை இழக்கின்றனர். இதில் 5 மணிநேர இழப்பிற்குக் காலநிலை மாற்றமே நேரடிக் காரணமாகும்.

மும்பை 84 மணிநேரமும், கொல்கத்தா 80 மணிநேரமும், ஹைதராபாத் 75 மணிநேரமும், பெங்களூரு 67மணிநேரமும்,டெல்லி 66 மணிநேரமும் தூக்க இழப்பைச் சந்தித்ததாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு நபருக்கு ஆண்டுக்குக் கூடுதலாக 7.9 மணிநேர உறக்க இழப்பு ஏற்பட்டது. இதுவே இந்தியாவில் மிக அதிகமானதாகும்.
கர்நாடகா 7.8 மணிநேர உறக்க இழப்புடனும், ராஜஸ்தான் 7.0 மணிநேர உறக்க இழப்புடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
ஏன் தூக்க இழப்பு?
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதிலிருந்து வெளிவரும் வெப்ப காற்று, நச்சுப் புகை, இரவு நேர வெப்பத்தை அதிகரிக்கிறது.
இதே போல், அதிவேக நகரமயமாக்களால் மரங்கள் அழிக்கப்பட்டு, காங்கிரீட் கட்டடங்களும், தார் சாலைகளும் அதிகரித்து வருகின்றன.
இவை பகல் நேர வெப்பத்தை அப்படியே உறிஞ்சி வைத்துக்கொண்டு, இரவில் மெல்ல வெளியேற்றுகின்றன. இதனால் இரவு நேரக் குளிர்ச்சி என்பதே இல்லாமல் போகிறது.
சூரியன் மறைந்த பின்னர் இரவில் நிலவும், மிதமான குளிர்ச்சியான சூழலில் நம் உடலின் வெப்பநிலை குறைந்து, ஆழ்ந்த தூக்கம் வரும். ஆனால், இரவில் நிலவும் அதிக வெப்பநிலை, தூக்கதிற்கு இடையூறு ஏற்படுத்தி, பகலில் ஏற்படும் வெப்ப அழுத்தத்திலிருந்து மனித உடல்கள் குளிர்ச்சியடைவதையும் மீள்வதையும் தடுக்கிறது.

போதுமான தூக்கமின்மையானது செயல்திறன் குறைபாடு, கடுமையான மன அழுத்தம், சோர்வு, கோபம் மாரடைப்பு, பக்கவாதம், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியவற்றுக்கு காரணமாகிறது.
குறைவான மற்றும் தரமற்ற உறக்கமும் ஆயுட்காலத்தைக் குறைத்து, விபத்துகள் மற்றும் காயங்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |