13 வயது சிறுமியை மணந்த கோவில் தீட்சிதர்! தாயே உடந்தை... பல தீட்சிதர்கள் அடுத்தடுத்து சிக்குவதால் அதிர்ச்சி
சிதம்பரத்தில் குழந்தை திருமண புகாரில் அடுத்தடுத்து தீட்சிதர்கள் கைதாகும் சூழலில் அது தொடர்பான புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க சிதம்பரம் நடராஜர் ஆலயம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தீட்சிதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது வைப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன.
இந்த புகார்கள் தற்போது அடுத்தடுத்து ஆதாரத்துடன் வெளிவரும் நிலையில் தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற திருமணம் தொடர்பாக கடந்த வாரம் இரண்டு தீட்சிதர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் வெளிவந்து இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் 2021 ஜனவரி நடந்த திருமணம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி 13 வயது சிறுமியை நாகரத்தினம் என்ற சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சிறுமியின் தாய் ஒப்புதலுடன் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாப்பிள்ளை நாகரத்தினத்தின் அண்ணன் சூர்யா தீட்சிதர் மற்றும் சிறுமியுன் தாய் தங்கம்மாள் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். குழந்தை திருமணம் செய்துகொண்ட நாகரத்தினம் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல் கடந்த 2021-ம் ஆண்டு 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 14 வயது மகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலைச் சேர்ந்த சோமசேகர தீட்சிதர் என்பவர் திருமணம் செய்து வைத்திருக்கிறார். தீட்சிதர்கள் தங்கள் குடும்பங்களுக்குள் திருமணம் செய்து கொள்வது வழக்கம் என்றும், இவர்கள் குழந்தை திருமணத்தை தடை செய்யப்பட்டதை பொருட்படுத்துவது கிடையாது என்றும் கூறப்படுகிறது.
தீட்சிதர்கள் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் குழந்தை திருமண விவகாரமும் பூதாகரமாகியுள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்ட குழந்தை திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் கைது நடவடிக்கைகள் தொடரும் என தெரிய வருகிறது.