நூடுல்ஸ் சாப்பிட்ட இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!
தமிழகத்தின் திருச்சியில் நூடுல்சை சாப்பிட்ட இரண்டு வயது குழந்தை சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்த தம்பதி சேகர்-மகாலட்சுமி. இவர்களது 2 வயது ஆண் குழந்தையான சாய் தருணுக்கு இரவு வேளையில் நூடுல்ஸ் சமைத்து கொடுத்துள்ளனர்.
அதன் பின்னர் மீதமுள்ள நூடுல்ஸ் உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளனர். மறுநாள் காலை அதே நூடுல்ஸை குழந்தைக்கு தாயார் மகாலட்சுமி உணவாக கொடுத்துள்ளார்.
அதனை சாப்பிட்ட குழந்தை மதியம் வரை வேறு எந்த உணவையும் சாப்பிடவில்லை. மேலும் உடல் சோர்வுடனும் காணப்பட்டது. இந்த நிலையில், குழந்தை சாய் தருண் மாலையில் திடீரென வாந்தி எடுத்து சுருண்டு கீழே விழுந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவர்கள் தரப்பில், உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை நூடுல்ஸை உண்டதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.