இறந்தவருடன் ரூ.1.5 கோடி மதிப்புள்ள கார் புதைப்பு - அரசு எடுத்த நடவடிக்கை
இறந்தவருடன் ரூ.1.5 கோடி மதிப்புள்ள கார் புதைத்தற்கு உள்ளூர் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ரூ.1.5 கோடி மதிப்புள்ள கார் புதைப்பு
சீனாவின் லியோனிங் மாகாணத்தை சேர்ந்த 70 வயதான தீவிர கார் சேகரிப்பாளர் உயிரிழந்துள்ளார். சமீபத்தில் அவர் காலமான நிலையில், இறுதிச்சடங்கின் போது அவரின் காரையும் அவருடன் சேர்த்து அவரது பிள்ளைகள் புதைத்துள்ளனர்.

அந்த கார், 1.1 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1.49 கோடி) மதிப்புள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் S450L கார் ஆகும். மேலும், "8888" என்ற அந்த காரின் எண் தகடும் 100,000 யுவான் (ரூ. 13.6 லட்சம்) இருக்கும் என நம்பப்படுகிறது.
சிவப்பு நிற துணி போர்த்தப்பட்ட அந்த காரை அகழ்வு இயந்திரத்தின் உதவியுடன் குழியின் உள்ளே இறக்கி, இறுதி சடங்கிற்கு வந்திருந்த கிராமத்தினர், மண்வெட்டி மூலம் அந்த காரின் மீது மண்ணை போட்டு மூடியுள்ளனர்.
அடக்கம் செய்ய உதவிய கிராம மக்கள் ஒவ்வொருவருக்கும், நன்றியின் அடையாளமாக 500 யுவான் (ரூ. 6,812) அடங்கிய சிவப்பு உறைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அரசு அதிகாரிகள் நடவடிக்கை
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரவலான விமர்சனங்களை பெற்றது.
A viral video from China's Liaoning shows a black Mercedes-Benz S450L with a “8888” license plate being lowered into a pit by an excavator and buried next to a tombstone. Local civil affairs authorities in Liaoyang say they are investigating the incident. pic.twitter.com/4LUJwGOf7L
— Shanghai Daily (@shanghaidaily) April 10, 2026
மேலும், வீடியோ உள்ளூர் குடிமை விவகாரப் பணியக அதிகாரிகளின் கவனத்திற்கு சென்ற நிலையில், நிலப்பிரபுத்துவ மூடநம்பிக்கையின் காரணமாக காரை சட்டவிரோதமாகப் புதைத்ததற்காக, அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கண்டித்ததோடு, வாகனத்தைத் தோண்டி அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
அகழ்வாராய்ச்சி, இடத்தை சுத்தம் செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டதுடன், அந்தக் குடும்பம் பகிரங்க மன்னிப்பும் கோரியது. மேலும், இதற்காக அபராதங்களையும் எதிர்கொள்ள நேரிடலாம் எனக் கூறப்படுகிறது.
சீனாவில் இறுதிச் சடங்கு வழக்கத்தின்படி, இறந்தவர்களுக்கு வசதியான மறுவாழ்வை உறுதி செய்வதற்காக, கார்கள், வீடுகள் மற்றும் வீட்டு உபகரணங்களின் காகித மாதிரிகள் எரிக்கப்படுகின்றன. ஆனால் இவர்கள் உண்மையான காரை புதைத்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |