'கொரோனா நமக்கு பொது எதிரி' இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ள சீனா!
கோவிட் -19 தொற்றுநோயை சமாளிக்க இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
நாட்டில் கோவிட் -19 தொற்று எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்க சீனா முன்வந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,32,730 புதிய COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு தொற்றுநோய் வெடித்ததிலிருந்து பதிவாகியுள்ள அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு என தெரியவந்துள்ளது.
மேலும், இது நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை 1,62,63,695-ஆக உயர்த்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் அண்மையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் (Wang Wenbin), "COVID-19 தொற்றுநோய் அனைத்து மனிதகுலத்தின் பொதுவான எதிரி.
அதனை கட்டுப்படுத்த சர்வதேச ஒற்றுமை மற்றும் பரஸ்பர உதவி தேவை" என்று கூறியுள்ளார்.
அதனால், அண்டை நாடான இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்க சீனா தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.