ஜேர்மனியின் இடத்தைப் பிடித்தது சீனா: பிரித்தானிய உறவில் முன்னேற்றம்
பிரித்தானியாவுடனான வர்த்தக உறவில் ஜேர்மனியை மிஞ்சி சீனா ஜேர்மனியின் இடத்தைப் பிடித்துள்ளது. முதன்முறையாக ஜேர்மனியை மிஞ்சி பிரித்தானியாவின் மிகப்பெரிய ஒற்றை இறக்குமதி சந்தையாக உருவெடுத்துள்ளது சீனா.
2018இல் 16.9 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான பொருட்கள் சீனாவிலிருந்து பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது அது 66 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், அதே காலகட்டத்தில், ஜேர்மனியிலிருந்து பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்ட பொருட்களின் மதிப்பு 12.5 பில்லியன் பவுண்டுகளாக குறைந்துள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்துக்கு பிரெக்சிட்டால் இடையூறு ஏற்பட்டதாலும், கொரோனா காலகட்டத்தின் தாக்கத்தால் உருவான சீன பொருட்களுக்கான தேவை அதிகரிப்பாலும் இந்த மாற்றம் ஏற்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து உருவான நிச்சயமற்றத் தன்மை காரணமாக, 2019 ஏப்ரலிலிருந்தே ஜேர்மனியிலிருந்து பிரித்தானியாவுக்கு இறக்குமதி குறையத்தொடங்கியது.
1997ஆம் ஆண்டிலிருந்தே, (2000ஆம் ஆண்டில் இறுதி ஆறு மாதங்கள் தவிர்த்து), ஜேர்மனியிலிருந்துதான் அதிக அளவில் பிரித்தானியா பொருட்களை இறக்குமதி செய்துவந்தது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தில் 23.1 சதவிகிதம் வீழ்ச்சி இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியம்தான் பிரித்தானியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா காலகட்டத்தில் மாஸ்குகளுக்கான துணி மற்றும் பிற
பாதுகாப்பு கருவிகளுடன், மின் சாதனங்களும் அதிக அளவில் பிரித்தானியாவுக்கு
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
கொரோனாவிலிருந்து மீண்டு, கொரோனா காலகட்டத்தில் தனது வர்த்தகம் வளர்ச்சியடையக்
கண்ட முதல் பெரிய நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது.