எனக்கும் பேட்டிங் செய்ய தெரியும்! 4 பந்தில் ஒட்டு மொத்த போட்டியை முடித்து காட்டிய கிறிஸ் மோரிஸ்
டெல்லி அணிக்கெதிரான போட்டியில், ராஜஸ்தான் வீரர் கிறிஸ் மோரிஸ் நான்கு பந்தில் ஒட்டு மொத்த ஆட்டத்தையே மாற்றி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக மாறினார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின, இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், கடைசி 2 ஓவர்களில் 27 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அப்போது ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. ஆனால், கிறிஸ் மோரிஸ் நான் இருக்கிறேன், போட்டி முடியவில்லை என்பது போல் அடித்து காட்டினார்.
ஆட்டத்தின், 19-வது ஓவரை டெல்லி அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான காகிசா ரபாடா வீசினார்.
அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் பறக்கவிட்ட மோரிஸ், அதே ஓவரின் 5-வது பந்தில் மற்றுமொரு சிக்ஸர் பறக்கவிட்டார் மோரிஸ். ஆனால், அதோடு தன்னுடைய பணி முடியவில்லை என்பதை உணர்ந்த மோரிஸ், கடைசி பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து ஸ்ட்ரைக்கை தக்க வைத்துக் கொண்டார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. டாம் கரன் வீசிய அந்த ஓவரில் இரண்டாவது பந்தையும் நான்காவது பந்தையும் சிக்சர்கள் விளாசி ராஜஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார் கிறிஸ் மோரிஸ்.
கடைசி கட்டத்தில் இறங்கி 18 பந்தில் 36 ஓட்டங்கள் குவித்த கிறிஸ் மோரிஸ் இப்போட்டி முடிந்த பின் கடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் செய்த செயலை குறிப்பிட்டார்.
அதாவது, இதற்கு முன் நடைபெற்ற பஞ்சாப் அணி போட்டியில், கடைசி 2 பந்துகளில் ராஜஸ்தான் அணி 5 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில், 5-வது பந்தை சிக்சருக்கு விலாச நினைத்த சாம்சனால், அதை சரியாக செய்ய முடியவில்லை.
அந்த பந்து பவுண்டரி அருகே சென்ற போதும், அவர் ஓட்டம் ஓடவில்லை.
மறுமுனையில் இருந்த மோரிஸ் ஓடி வந்து, மீண்டும் கிரிஸிற்கு திரும்பினார். பிறகு கடைசி பந்தை எதிர்கொண்ட சாம்சன் அந்த பந்தில் சிக்ஸ் அடிக்காமல் அவுட்டானார். இதனால் அந்த போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை சந்தித்தது.
அந்தப் போட்டியில் சாம்சன் விளையாடியது ஒரு கனவைப் போன்று இருந்தது. ஆனால் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுக்க நான் ஓடிய போது அவர் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
ஒருவேளை அவர் ஆறாவது பந்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெற வைத்திருந்தார் என்றால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருக்க மாட்டேன் என்று கூறினார்.