போதை பொருளை பயன்படுத்தியது உண்மைதான்.., ஆனால்?- நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம்
நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருளை பயன்படுத்தியது உண்மை தான் ஆனால் யாருக்கும் விற்பனை செய்யவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
நடிகர் ஸ்ரீகாந்த் கைது
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் தகராறு ஏற்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரசாந்திடமிருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் தனிப்படை பொலிஸார் விசாரணை நடத்தி, ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொண்டனர்.
ரத்த மாதிரி பரிசோதனையில் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை கைது செய்த போலீசார், இந்த வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்த்து, எழும்பூர் 14ஆவது பெருநகர நீதிபதி முன்பாக, நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, நடிகர் ஸ்ரீகாந்தை அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அளித்த வாக்குமூலம்
போதைப் பொருளை யாருக்கும் விற்பனை செய்யவில்லை எனவும், தான் மட்டும் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், வெளிநாடு செல்ல மாட்டேன், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் , என்னுடைய குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிபதியிடம் ஸ்ரீகாந்த் கோரிக்கை வைத்தார்.
அதை ஏற்க மறுத்து, ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, போதைப் பொருள் தடுப்பு வழக்கு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஜாமின் மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.
இதனையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் இன்று ஜாமின் மனுதாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நடிகர் ஸ்ரீகாந்துக்கு முதல் வகுப்பு சிறைக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |