ஹிஜாப் அணியாமல் புகைப்படம் வெளியிட்ட மாணவி- தலையை வெட்டுவோம் என மிரட்டல்
ஹிஜாப் அணியாமல் புகைப்படம் வெளியிட்ட மாணவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அவர் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
காஷ்மீரை சேர்ந்தவர் அரூசா பர்வேஸ். பிளஸ்-2 படித்து வந்தார். இதன் தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் திகதி வெளியான நிலையில் அரூசா பர்வேஸ் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருந்தார்.
இதையடுத்து அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த புகைப்படத்தில் அவர் ஹிஜாப் அணியவில்லை. அவர் ஹிஜாப் அணியாமல் புகைப்படம் வெளியிட்டதற்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஒருவர் வெளியிட்ட பதிவில், கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள், சிறுமிகள் ஹிஜாப்புக்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் காஷ்மீரில் நமது சகோதரி முகத்தை ஹிஜாப் கொண்டு மறைக்காமல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை நாம் அனுமதிக்க முடியாது. அடுத்த முறை அவர் இவ்வாறு புகைப்படம் வெளியிட்டால் அவரது தலையை வெட்டுவோம் என்று கூறியுள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து அரூசா பர்வேஸ் கூறுகையில், ஹிஜாப் அணிவது அல்லது அணியாதது ஒருவரின் மதத்தின் மீதான நம்பிக்கையை வரையறுக்காது. அவர்கள் செய்யும் விமர்சனங்களை விட அல்லாவை நான் அதிகம் நேசிக்கிறேன்.
நான் இதயத்தால் ஒரு இஸ்லாமியர் ஹிஜாப் மூலம் அல்ல. இந்த மோசமான ஓன்லைன் தாக்குதல் என் குடும்பத்தை நிலைகுலைய செய்துள்ளது. அவர்களின் இந்த கருத்துக்கள் எனக்கு முக்கியமில்லை, ஆனால் என் பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர் என்ற தனது நிலையை விளக்கியுள்ளார்.