இந்த 2 கொரோனா தடுப்பூசியையும் கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது! ஐசிஎம்ஆர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
கொரோனா வைரஸிற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இரண்டும் கலந்து போடுவது பாதுகாப்பானது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.
கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதிலும் தீவிரமாக பரவி, பல்வேறு வகைகளில் உருமாறி தீவிரமாக பரவி வருகிறது.
இதனால் இதைக் கட்டுபடுத்துவதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதோடு ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக்கும் போடப்பட்டு வருகிறது. கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசிகளில் ஒவ்வொருவருக்கும் ஒரே நிறுவனம் தயாரித்த இரண்டு டோஸ் தடுப்பூசி வழங்கப் படுகிறது.
இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து போடுவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் கிடைத்த முடிவுகள் தொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிக்கையில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியை கலந்து அளிப்பது தொடர்பான ஆய்வுகளில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளது.
அப்படி போடுவது பாதுகாப்பானது மட்டும் அல்லாமல், சிறந்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது என தெரிவித்து உள்ளது.