பிரான்சில் மீண்டும் ஒரு அருங்காட்சியகத்தில் கொள்ளை
பிரான்சில் மேலும் ஒரு அருங்காட்சியத்தில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இம்முறை, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
பிரான்சில் தொடரும் கொள்ளைச் சம்பவங்கள்
பிரான்சில், கடந்த மாதம் பாரீஸிலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் கொள்ளையர்கள் 1.5 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கொள்ளையடித்துச் சென்றார்கள்.

ஞாயிற்றுகிழமையன்று, பாரீஸிலுள்ள Louvre அருங்காட்சியகத்திலிருந்து 88 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
மேலும் ஒரு அருங்காட்சியகத்தில் கொள்ளை
ஞாயிற்றுக்கிழமை நடந்த Louvre அருங்காட்சியக கொள்ளைச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், Langres என்னுமிடத்தில் அமைந்துள்ள Maison des Lumières என்னும் அருங்காட்சியகத்தில் ஒரு கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விடயம் என்னவென்றால், இந்த கொள்ளைச் சம்பவமும் ஞாயிற்றுக்கிழமைதான் நடந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் செவ்வாய் முதல் ஞாயிறு வரைதான் செயல்படும்.
ஆக, ஞாயிற்றுக்கிழமை இரவு, அருங்காட்சியகம் மூடப்பட்ட பின் இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை அருங்காட்சியகத்தைத் திறந்த ஊழியர்கள், ஒரு கண்ணாடிப்பேழை உடைந்திருப்பதைக் கவனித்து பொலிசாரை அழைத்துள்ளனர்.
அந்த கண்ணாடிப்பேழைக்குள் 1790க்கும் 1840க்கும் இடைப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்த சுமார் 2,000 தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை மொத்தமாக கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர். அந்த நாணயங்களின் மதிப்பு, 90,000 யூரோக்கள் ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |