அமெரிக்க இளைஞன் ஒருவனுக்கு 1,282 ஆண்டுகள் கூடுதலாக சிறைத்தண்டனை: அவன் செய்த தவறு...
அமெரிக்காவின் இளைஞன் ஒருவனுக்கு ஜாமீனில் வர இயலாத ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி ஒருவர், கூடுதலாக 1,282 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
2019ஆம் ஆண்டு, மே மாதம் 7ஆம் திகதி, கொலராடோவிலுள்ள பள்ளி ஒன்றில் படித்துக்கொண்டிருந்த Devon Erickson மற்றும் Alec McKinney என்னும் இரு மாணவர்கள் தங்கள் வகுப்புக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்தார்கள். அவர்களை Kendrick Castillo (18) என்ற மாணவனும் மற்றும் இரண்டு மாணவர்களும் பாய்ந்து சென்று தடுக்க முயல, அப்போது Erickson சுட்டதில் Castillo கொல்லப்பட்டான்.
பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடக்கும் சத்தம் கேட்டு உயிருக்கு பயந்து ஆங்காங்கு பிள்ளைகள் திகிலுடன் பதுங்கிக்கொள்ள, சிலர் தங்கள் பெற்றோருக்கு மொபைலில் செய்திகள் அனுப்ப, நகரமே பரபரப்படைந்தது.
Ericksonம் Alec McKinneyயும் கைது செய்யப்பட, திருநம்பியாகிய Alec McKinney தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதின்பேரில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தங்கள் துயரங்களை பகிர்ந்துகொண்டார்கள். Ericksonஆல் கொல்லப்பட்ட Castilloவின் தாய் Maria, தன் ஒரே மகனை இழந்ததை தாங்க இயலாமல் தவிப்பதாக கண்ணீர் விட்டுக் கதறினார். இந்த கொடூர கொலைகாரனுக்கு இரக்கம் காட்டாதீர்கள் நீதிபதி அவர்களே, என கதறினார் அவர்.
அனைத்தையும் கேட்ட நீதிபதியான Teresa Slade, Erickson (20)க்கு ஜாமீனில் வர இயலாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன், கொடூரமாக கொலை செய்ததுடன், தனது தவறுக்கு Erickson இதுவரை கொஞ்சம் கூட வருந்தாததால், அவனுக்கு கூடுதல் சிறைத்தண்டனை விதிப்பதாக தெரிவித்தார் நீதிபதி.
அவர் Ericksonக்கு கூடுதலாக சிறைத்தண்டனை விதித்த ஆண்டுகள்... 1,282!
இந்த வழக்கு தொடர்பாக, மாகாணம் முழுவதிலுமிருந்து தனக்கு ஏராளம் கடிதங்கள் வந்துள்ளதாக கூறிய நீதிபதி, துப்பாக்கிச் சூடு நடக்கும்போது, தாங்கள் கொல்லப்பட்டுவிடுவோமோ என பயந்து ஒளிந்துகொண்டிருந்த 13 வயது மாணவ மாணவிகள், இப்போதும் கழிவறைக்கு கூட செல்ல பயப்படுவதாகவும், அன்று நடந்த பயங்கரத்தின் தாக்கத்தால், இன்றும் 15 வயது மாணவ மாணவிகள் தங்கள் அறைகளுக்கே செல்ல பயந்துகொண்டிருப்பதாகவும், இப்போது 19 வயதாகும் அன்றைய மாணவ மாணவிகள், கல்லூரிக்குப் படிக்கச் சென்றால், அங்கு வகுப்பறைகளில் ஒரு கதவுதான் இருக்கும், அப்போது யாராவது துப்பாக்கிச் சூடு நடத்தினால் என்ன செய்வது என்று பயந்து கல்லூரிக்குச் செல்லும் திட்டத்தையே மாற்றிவிட்டதாகவும், இப்போது 21 வயதாகும் அன்றைய சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அன்று இருட்டறைகளில் கதவை மூடிக்கொண்டு, வெளியே கேட்கும் துப்பாக்கி சத்தத்தால் பயந்துபோயிருந்ததால், இப்போதும் இருட்டைப் பார்த்து பயப்படுவதாகவும் தெரிவித்தார். அதற்கு காரணம் Erickson, நீதான் என்றார் நீதிபதி.
துப்பாக்கிச் சூடு நடத்தும்போது Ericksonக்கு போதைப்பொருள் அடிமைத்தனம் முதல் பல பிரச்சினைகள் இருந்ததாக, அவனது தாய் கூறியும், அதை ஏற்க மறுத்த நீதிபதி, Ericksonக்கு ஆயுள் தண்டனையும், கூடுதலாக 1,282 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அதாவது, கடைசி வரை Ericksonஆல் சிறையிலிருந்து வெளியே வரவே முடியாது...