ஜேர்மனியில் முழு பொதுமுடக்கம் தேவையா?: மருத்துவமனைகளின் கருத்து
ஜேர்மனியில் முழுமையான பொதுமுடக்கம் தற்போதைக்கு தேவையில்லை என ஜேர்மன் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகள் தற்போது கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனாலும், மக்கள் கூடுகைகள் குறித்து கட்டுப்பாடுகள் விதிப்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியுள்ள ஜேர்மன் மருத்துவமனைகளின் கூட்டமைப்பின் தலைவரான Gerald Gass, குறிப்பாக தடுப்பூசி பெறாதவர்களுக்கு தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் தடுப்பூசி கட்டாயமாகும். ஜேர்மனியிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் தடுப்பூசி பெற்றோர் வீதம் 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளதாக Gass தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பெறாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது, அவர்களைக் கஷ்டப்படுத்துவதற்காக அல்ல என்று கூறியுள்ள Gass, அது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ஆகவே, அது சரியானதே என்கிறார்.
இதற்கிடையில், ஜேர்மனியில், ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள் என்ற எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.
The Robert Koch நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை 390.9 ஆக இருந்த அந்த எண், திங்கட்கிழமை நிலவரப்படி 389 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.