தடுப்பூசி பெறாதவர்களை எச்சரிப்பதற்காக மோசமான வார்த்தைகளை பயன்படுத்திய ஜேர்மன் அமைச்சருக்கு கண்டனம்
ஜேர்மனியில், கொரோனா தடுப்பூசி பெறாதவர்களை எதிர்மறையான வார்த்தைகளால் விமர்சித்த அமைச்சருக்கு வைராலஜி துறை நிபுணர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn, தடுப்பூசி பெறாதவர்களை எச்சரிக்கும் வகையில், இந்த குளிர்காலம் முடிவடையும்போது, ஒருவேளை, சற்று இழிவாகக் கூறினால், ஜேர்மனியிலுள்ள அனைவரும், ஒன்றில் கொரோனா தடுப்பூசி பெற்றிருப்பார்கள், கொரோனாவிலிருந்து விடுபட்டிருப்பார்கள் அல்லது இறந்திருப்பார்கள் என்று கூறியிருந்தார்.
ஜேர்மனி கொரோனாவின் நான்காவது அலையுடன் போராடிக்கொண்டிருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும், ஜேர்மனியில் 30,643 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப்பிரிவுகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருவதும் உண்மைதான்.
ஆனாலும், ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn, தடுப்பூசி பெறாதவர்களை எச்சரிக்கும் வகையில் பேசியது தவறானது என Bonn பல்கலைக்கழக பேராசிரியரும், வைராலஜி துறை நிபுணருமான Hendrik Streeck என்பவர் தெரிவித்துள்ளார்.
தான் Spahnஇன் கருத்துக்களை மறுப்பதாக தெரிவித்துள்ள Streeck, கொரோனா வைரஸ் எப்படி பயணிக்கிறது, எவ்வளவு காலம் இந்தக் கொள்ளைநோய் நீடிக்கும் என்பதை அவரது கூற்று பிரதிபலிக்கவில்லை என்கிறார்.
ஜேர்மனியில் கொரோனா நிலைமை மோசமாக உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்று கூறிய Streeck, இந்த குளிர்காலம் முடிவடையும்போது, ஒருவேளை, சற்று இழிவாகக் கூறினால், ஜேர்மனியிலுள்ள அனைவரும், ஒன்றில் கொரோனா தடுப்பூசி பெற்றிருப்பார்கள், கொரோனாவிலிருந்து விடுபட்டிருப்பார்கள் அல்லது இறந்திருப்பார்கள் என்ற வாக்கியத்தை நான் ஒப்புக்கொள்ளவில்லை, காரணம், அப்படியானால், இந்த குளிர்காலத்தில் எல்லோருமே கொரோனா வைரஸை அணுகும் சூழல் ஏற்படும் என்று பொருளாகிவிடும்.
உண்மையில் அப்படியில்லை என்று கூறும் Streeck, கொரோனா வைரஸ் சமூக குழு ஒன்றிலிருந்து மற்றொரு சமூகக் குழுவிற்கு செல்கிறது என்கிறார்.
கொரோனா பரவலுக்கெதிரான பாதுகாப்பு, தடுப்பூசிதான் என்ற அமைச்சரின் கருத்தை ஆமோதிக்கும் Streeck, ஆனால், 2022ஆம் ஆண்டின் குளிர்காலத்துடன் கொரோனா முடிவடைந்துவிடும் என்ற அமைச்சர் Spahnஇன் கணிப்பு தவறு என்கிறார்.
நாம் தடுப்பூசி வழங்கும் அளவை அதிகரிக்கவில்லையென்றால், அடுத்த குளிர்காலத்தில் மட்டுமல்ல, அடுத்த இலையுதிர்காலத்திலும் கொரோனா இருக்கும் என்று கூறியுள்ள Streeck, நீண்ட காலத்திற்கு நாம் ஆயத்தமாகவேண்டும், அடுத்த ஆண்டைக் குறித்தும் எண்ணவேண்டும் என்கிறார்.