முப்படை தளபதி ஹெலிகாப்டர் விபத்து! தொழில்நுட்ப கோளாறு காரணமல்ல... வெளியானது விசாரணை அறிக்கை
இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேரின் உயிரை காவு வாங்கிய ஹெலிகாப்டர் விபத்திற்கு தொழில்நுட்ப கோளாறு மற்றும் நாசவேலை காரணமில்லை என தெரியவந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 8ம் திகதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர், தமிழகத்தின் குன்னூர் அருகே மலைப் பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த அனைவருமே உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக முப்படையின் விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து விமானப்படை தலைமைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் வி.ஆர். செளதரி, ஏர் மார்ஷல் மனவேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணைக் குழு விசாரணையில் இறங்கியது.
இந்த விசாரணை தொடர்பான அறிக்கை தற்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில், இந்த விபத்துக்கு காரணம் தொழில்நுட்ப கோளாறோ அல்லது சதியோ கிடையாது எனவும் மோசமான வானிலையே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் பைலட்டின் கட்டுப்பாட்டில்தான் கடைசி வரை இருந்ததாகவும், மோசமான வானிலை காரணமாக அது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பைலட்டின் தவறால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைலட் தவறு செய்யவும் மோசமான வானிலையே காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதாவது, விபத்துக்கு காரணம் Controlled Flight Into Terrain (CFIT) என்பதாகும். அதன்படி, ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது இந்த சூழல் ஏற்படும். அதாவது தரையிறங்கப் போகும் போது அல்லது தரையிறங்கப் போகும் இடத்தில், வானில் திடீரென மேகமூட்டம் சூழ்ந்து கொண்டால் விமானம் அல்லது ஹெலிகாப்டர் தடுமாறும். அல்லது விமானி தடுமாறி தவறுகள் செய்ய வாய்ப்பு நேரிடும் என்பது அர்த்தமாகும்.
இந்த விபத்துக்கு காரணம் சர்வதேச நாடுகளின் சதி என்றெல்லாம் யூகங்கள் கிளம்பிய நிலையில் இந்த அறிக்கையின் மூலம் சரியான பதில் கிடைத்துள்ளது.