பிரித்தானியாவில் கால்பந்து ரசிகரை தூக்கி வந்து சரமாரியாக குத்திய பொலிஸ்! சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ
பிரித்தானியாவில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் ரசிகர் ஒருவரை பொலிஸார் குண்டுக்கட்டாக தூக்கி வந்து சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள மான்செஸ்டர் நகரில், நேற்று மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லிவர்பூல் ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையில் கால்பந்து போட்டி நடக்கவிருந்தது.
ஆனால், போட்டி ஆரம்பிக்கும் முன்னரே இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கலவரம் ஆனதைத் தொடர்ந்து பாதுகாப்பது காரங்களுக்காக போட்டிகள் நிறுத்தப்பட்டது.
கலவரத்தைக் கட்டுப்படுத்த அங்கு Old Tafford மைதானத்துக்கு மான்செஸ்டர் பெருநகர பொலிஸார் குவிக்கப்பட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு ரசிகரை 5 பொலிஸார் சேர்ந்து குண்டுக்கட்டாக தூக்கி வந்து அடித்து வெளுத்தனர்.
அதில் ஒரு பொலிஸார், அந்த நபரை 5 முறை மிகவும் பலமாக குத்தி தாக்கினார். இந்த காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள Lowry தங்கும் விடுதியிலிருந்து ஒருவர் கமெராவில் பதிவு செய்துகொண்டார். மேலும் அங்கு நடந்த சம்பவத்தை பலரும் தங்களது மொபைல் போனில் பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பொலிஸ் தரப்பில் பிரபல ஊடகம் விளக்கம் கேட்டுள்ளனர்.
அப்போது பதிலளித்த பொலிஸ், குறித்த நபர் தற்போது தங்களின் பிடியில் தான் இருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும், அவர் வாகன திருட்டு மற்றும் பொது ஒழுங்கு குற்றத்தின் கீழ் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த கலவரத்தில் பல காவல்துறை அதிகாரிகள் ரசிகர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இரண்டு பொலிஸார் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவருக்கு முகத்தில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.