ஜேர்மனியில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ள கொரோனா தொற்று: அவசர நிலையை நீட்டிக்க அழைப்பு
ஜேர்மனியில் கொரோனா பரவல் பயங்கரமாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அவசர நிலையை நீட்டிக்குமாறு மூன்று மாகாணங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
நாட்டில் ஏழு நாட்களில் எத்தனை பேருக்கு புதிதாக தொற்று என்பதைக் கணக்கிடும் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மூன்று ஜேர்மன் மாகாண சுகாதாரத்துறை அமைச்சர்கள், பொதுமுடக்கம் அல்லது பள்ளிகள் மூடல் போன்ற கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு, புதிதாக ஆட்சி அமைக்க உள்ள கட்சிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
சனிக்கிழமை நிலவரப்படி, கடந்த வாரத்தில் ஜேர்மனியில் ஏழு நாட்களில் எத்தனை பேருக்கு புதிதாக கொரோனா தொற்றியுள்ளது என்பதைக் காட்டும் எண்ணிக்கை 277.4ஆக உயர்ந்துள்ளதாக Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் சில பகுதிகளில் அது 500ஐ எட்டியுள்ளது.
இந்நிலையில், Baden-Wuerttemberg, Hessen மற்றும் Brandenburg மாகாணங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள், நிலைமை மோசமாகும் பட்சத்தில் பொதுமுடக்கம் அல்லது பள்ளிகள் மூடல் போன்ற கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும் வகையிலான முடிவுகளை மாகாணங்கள் எடுக்கும் வகையில் புதிதாக ஆட்சி அமைக்க உள்ளவர்கள் திட்டமிடுமாறு அவர்களைக் கோரியுள்ளார்கள்.
அத்துடன், மருத்துவமனைகளுக்கு அழுத்தம் அதிகமாகும் நிலையில், இந்த கட்டுப்பாடுகள் தேசிய அளவில் நீட்டிக்கப்படவேண்டும் என்றும் அந்த மூன்று அமைச்சர்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து மருத்துவமனைகள் அதிக அழுத்தத்திற்குள்ளாகும் சூழலில், அதை எதிர்கொள்ளும் வகையில், இராணுவமும் உதவத் தயாராகிவருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.