கொரோனாவால் நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டால் இந்த பிரச்சனைகள் ஏற்படுமாம்! எச்சரிக்கை தகவல்
கொரோனா தொற்றுக்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால், தொடர் மருத்துவ பரிசோதனைகள் செய்வது அவசியம்' என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு, சில நாட்களுக்கு பின் வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, 'கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி, நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்தவர்கள், குணமடைந்த பின் மிக கவனமாக இருக்க வேண்டும்' என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து, மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அதுல் இன்கேல் கூறியதாவது:கொரோனாவுக்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களுக்கு, ஆறு மாத காலத்திற்குள் சிறுநீரக கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சிறுநீரக கோளாறுகளில் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. ஆறு மாதங்களுக்கு பின், பரிசோதனை மேற்கொள்ளும் போது, 'டயாலிசிஸ்' செய்ய வேண்டிய அளவுக்கான தீவிர பாதிப்பு நிலைக்கு சிலர் சென்றுவிடுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே, நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், தொடர் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.