கொரோனா வார்டில் இருந்த பெண்ணின் ஆக்ஸிஜன் குழாயை பிடுங்கிய மர்ம நபர்கள்! மகன் கண்ட அதிர்ச்சி காட்சி
இந்தியாவில் வார்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயின் ஆக்சிஜன் குழாயை கொள்ளையர் பிடுங்கிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குடா பகுதியைச் சேர்ந்தவர் பூனம் வீரா (49). கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானதால், அருகில் உள்ள மருத்துவமனையில் பூனம் வீராவை, அவரது மகன் தீபக் சேர்த்தார்.
கொரோனா நோய்த்தொற்றால் பூனம் வீராவின், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டன. ஆபத்தான நிலையில் பூனம் இருந்ததால், சில நாட்கள் மட்டுமே அவர் வாழ முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால், அவரது மகன் தீபக், தனது தாயை முரார் மாவட்ட மருத்துவமனையின் கோவிட் வார்டில் அனுமதித்தார். இந்த மருத்துவமனையின் வளாகத்திற்கு வெளியே உட்கார்ந்து கொண்டே, தனது தாயை தீபக் கவனித்து வந்தார். அவ்வப்போது, அவர் தனது தாயை ஜன்னல் வழியாகப் பார்ப்பார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் சிறுநீர் கழிப்பதற்காக தீபக் எழுந்து சென்றார்.
அப்போது, மருத்துவமனை வார்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது தாயுடன் இணைக்கப்பட்ட ஆக்சிஜன் குழாயை, இரண்டு மர்ம நபர்கள் வெளியே பிடுங்கி எடுப்பதை ஜன்னல் வழியாக பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே கூச்சலிட்ட தீபக், மருத்துவமனையின் உள்ளே சென்று, அந்த மர்ம நபர்கள் இருவரையும் பிடிக்க முயன்றார்.
ஆனால், அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இந்த செயலில் ஈடுபட்ட இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.
மேலும், பொலிசார் இது குறித்து கூறுகையில், சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் காதில் இருந்த ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளனர்.
நோயாளி பெண் கூச்சலிடுவார் என்பதால், முதலில் அவரது ஆக்சிஜன் குழாயை பிடுங்கியுள்ளனர். அதனை அவரது மகன் பார்த்ததால், இருவரும் தப்பிவிட்டனர்.
மகனின் செயலால் தாயின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தலைமறைவான இருவர் குறித்தும் சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் கண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.