தமிழகத்தில் ஒரேநாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா: வெளியான நடுங்க வைக்கும் தகவல்
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
நாளுக்கும் பல ஆயிரம் பேர்கள் கொரோனா பாதிப்பால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் மக்கள் மருந்து, ஆக்ஸிஜன், படுக்கை வசதி உள்ளிட்டவைகளின் பற்றாக்குறையால் அவதிப்பட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று 12 வயதுக்குட்பட்ட 810 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 24,898 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,97,500 ஆக அதிகரித்துள்ளது.