ஜூலை 1ஆம் திகதி முதல்... ஜேர்மனியின் கொரோனா பயண எச்சரிக்கை பட்டியலிலிருந்து நீக்கப்பட இருக்கும் நாடுகள்
ஜூலை 1ஆம் திகதியிலிருந்து ஜேர்மனி பல நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையை விலக்கிக்கொள்ள இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
100,000 பேருக்கு 50 முதல் 200 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நாடுகள் இனி அபாய நாடுகளாக கருதப்படாது. சொல்லப்போனால், ஜூலை 1 முதல் வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்கெதிராக ஜேர்மன் அரசு எச்சரிக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், அதிக அளவில் கொரோனா தொற்று காணப்படும் நாடுகளுக்கான கட்டுப்பாடுகள் அமுலில் இருந்துகொண்டுதானிருக்கும்.
பல நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து, அதிக அளவில் மக்கள் தடுப்பூசி பெற்று வருவதைத் தொடர்ந்து, இந்த கோடையில் ஜேர்மனிக்கு நம்பிக்கை திரும்புகிறது என்றார் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas. மிக நீண்ட பொது முடக்கங்களுக்குப் பின், அதிக அளவில் சகஜத்தன்மையை நாம் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ள அவர், அது பயணத்துக்கும் பொருந்தும் என்றார்.
ஆனால், எச்சரிக்கை விலக்கப்படுவதை அலட்சியமாக இருப்பதற்கான அழைப்பிதழ் என மக்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தினார் அவர். ஏற்கனவே, அர்மீனியா, ஆஸ்திரியா, அஜர்பைஜான், போஸ்னியா மற்றும் ஹெர்செகோவினா, கனடா, சைப்ரஸ், கொசோவா, லெபனான், மால்டோவா, மாண்டினெக்ரோ, வடக்கு மாசிடோனியா, செர்பியா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் இனி அபாய நாடுகளாக கருதப்படாது என்று ஜேர்மனி அறிவித்துள்ளது.
அத்துடன், போர்ச்சுகல், நார்வே, குரோவேஷியா, கிரீஸ் மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளும் இனி அபாய பகுதிகளாக ஜேர்மனியால் கருதப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.