கொரோனா வைரஸ் பெரும்பாலும் இப்படியே பரவுகிறது! ஆதாரத்தை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்
கொரோனா வைரஸ் பெரும்பாலும், திறந்தவெளியை விட, மூடப்பட்ட பகுதிகளிலே மிக அதிகமாக பரவுகிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எப்படியெல்லாம் பரவுகிறது? அதை எப்படி கட்டுப்படுத்தலாம்? என்பது குறித்த ஆய்வுகள் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அதன் படி, வைரல் பாதிப்பு உள்ளவர்கள் தும்மும்போதோ, இருமும்போதோ வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் வைரஸ் காற்றில் பரவி மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா வைரசானது பெரும்பாலும் காற்றின் மூலம் பரவுவதற்கு வலுவான சான்றுகள் கிடைத்துள்ளதாக லான்செட் என்ற மருத்துவ இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், வைரஸ் முக்கியமாக காற்றின் மூலம் பரவும் என கருதுவதில் தோல்வியடைந்த பொது சுகாதார நடவடிக்கைகள், வைரஸ் பரவ வழிவகுத்திருப்பதாகவும், மக்களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், கொரோனாவின் பரிமாற்ற விகிதங்கள் திறந்தவெளியை விட மூடப்பட்ட பகுதிகளில் மிக அதிகமாக உள்ளன, உள்ளரங்குகளில் வென்டிலேட்டர்கள் மூலம் காற்றை வெளியேற்றுவதால் வைரஸ் பரவல் பெரிதும் குறைக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், அதேசமயம், எச்சில் துப்புவதால் பெரிய நீர்த்துளிகள் வழியாக வைரஸ் எளிதில் பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் ஆய்வாளர்கள் கண்டறியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.