கங்கை ஆற்றில் கொத்து கொத்தாக தொடர்ந்து மிதக்கும் சடலங்கள்! பெரும் பீதியில் இருக்கும் மக்கள்
இந்தியாவின் கங்கை ஆற்றின் கரைகளில் தொடர்ந்து சடலங்கள் கொத்து கொத்தாக மிதந்து வருவது பொதுமக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பீகார் மாநிலம் வழியாக செல்லும் கங்கை ஆற்றங்கரையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து கொண்டிருந்தன.
கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் தான் ஆற்றில் மிதக்கிறது என்ற பரபரப்பு தகவல் வெளியானது.
இது குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறிய நிலையில் மீண்டும் கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பீகாரின் பிரமாபூரில் தான் சடலங்கள் மிதந்து வருவது தெரியவந்துள்ளது. ஆனால் பீகார் வழியாக ஆற்றில் சடலங்கள் மிதக்கவில்லை எனவும், உத்தரபிரதேசத்தை சுற்றியுள்ள கிராமங்கள் அருகில் தான் சடலங்கள் மிதப்பதாக பிரமாபூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தான் சடலங்களை கங்கை ஆற்றில் தூக்கி வீசுகிறார்கள். இதனால் எங்களுக்கு உடல்நலப்பிரச்சினை வரும் ஆபத்து உள்ளது என பீதியுடன் கூறியுள்ளனர்.
அதிகாரபூர்வமாக கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் கணக்கில் காட்டப்படாத சடலங்கள் இப்படி கங்கை ஆற்றில் மிதக்கப்படவிடுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனிடையில் சடலங்கள் எங்கிருந்து வந்தது என்பது குறித்து அறிய தீவிர விசாரணை நடந்து வருவதாக உத்தரபிரதேசத்தின் காசிப்பூர் மாவட்ட நீதிபதி எம்பி சிங் தெரிவித்துள்ளார்.