முன்கூட்டியே கணித்திருக்க முடியும்: ஜேர்மனி வெள்ள அபாயம் குறித்து பிரித்தானிய நிபுணர் தெரிவித்துள்ள கருத்து
ஜேர்மனியில் 160க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட வெள்ளம் குறித்து முன்கூட்டியே கணித்திருக்கமுடியும் என்கிறார் பிரித்தானியாவைச் சேர்ந்த பெருவெள்ள நிபுணர் ஒருவர்.
பெருவெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று கூறும் ரீடிங் பல்கலைக்கழக நீரியல் துறை பேராசிரியரான Hannah Cloke, எனது பார்வையில், இதை முன்கூட்டியே கணித்திருக்கமுடியும் என நான் கருதுகிறேன் என்கிறார்.
இந்த எச்சரிக்கைகள் போய்ச் சேரவேண்டியவர்களுக்கு போய்ச் சேருவதில் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்று கூறும் Hannah, தாங்கள் எவ்வளவு பெரிய அபாயத்தில் இருக்கிறோம் என்பதை ஒருவேளை மக்கள் புரிந்துகொள்ளவில்லை போலும், இதேபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தவிர்க்க நாம் அனைவரும் மிக அதிக முயற்சிகள் எடுக்கவேண்டியுள்ளது என்கிறார்.
வாரம் துவங்கும்போதே நான் வெள்ளம் குறித்த தகவலை கவனித்தேன், அது மிக பயங்கரமாக இருந்தது, பெரும் கவலையை ஏற்படுத்தக்கூடிய வெள்ளம் வரப்போவது தெரிந்தது என்கிறார் Hannah.
வெள்ள அபாயம் குறித்த எச்சரிக்கையை அரசு எதிர்கொண்ட விதம் குறித்து விமர்சனம் எழுந்துள்ள நிலையில், ஜேர்மன் உள்துறை அமைச்சரான Horst Seehofer, உள்ளூர் அதிகாரிகள்தான் பெருவெள்ளம் குறித்து எச்சரிக்கைகள் விடுத்திருக்கவேண்டும், அவர்களுக்குத்தான் உள்ளூர் நிலவரம் தெரியும் என்று கூறியிருக்கிறார்.
பெருவெள்ளத்தின் தீவிரம் மக்களை ஆச்சரியப்படுத்தியிருக்கலாம், ஒருவேளை இப்படி ஒரு பயங்கர வெள்ளம் ஏற்படும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும் என்று கூறும் Hannah, இவ்வளவு பெரிய பேரழிவை எதிர்கொண்ட அனுபவம் உள்ளூர் அதிகாரிகளுக்கு ஒருவேளை இல்லாமல் இருந்திருக்கலாம் என்கிறார்.
அத்துடன், அதை எதிர்கொள்ளும் அளவுக்கு கருவிகளும், வெள்ளத்தை கணிக்க போதுமான உதவியும் அவர்களுக்கு கிடைக்காமலும் இருந்திருக்கலாம் என்கிறார் Hannah.