எங்கள் நாட்டுக்கு புலம்பெயர்ந்தோர் ஆற்றியுள்ள பணி அளவிட முடியாதது... மனதார புகழும் ஒரு நாட்டின் ஜனாதிபதி
எங்கள் நாட்டுக்கு புலம்பெயர்ந்தோர் ஆற்றியுள்ள பணி அளவிட முடியாதது என மனதார பாராட்டியுள்ளார் ஜேர்மன் ஜனாதிபதி.
ஜேர்மனியில் துருக்கி நாட்டவர்கள் பணி செய்வது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று நிறைவேற்றப்பட்டதன் 60ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய ஜேர்மன் ஜனாதிபதியான Frank-Walter Steinmeier, துருக்கிய புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களை மனதார பாராட்டியதுடன், அவர்கள் ஜேர்மனியின் இன்றியமையாத பாகம் என்றும் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்து வேலை செய்தவர்கள், அவர்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் இல்லையென்றால் இன்றைய ஜேர்மனியை கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது என்றார் அவர்.
1950களில் ஜேர்மனி வெளிநாட்டுப் பணியாளர்களை விவசாயம், கட்டுமானம், எஃகு, தானியங்கி மற்றும் சுரங்கத் தொழில்களுக்காக பணிக்கமர்த்தத் தொடங்கியது. 1961ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 30ஆம் திகதி, பணியாளர்களை ஜேர்மனிக்கு அனுப்புவது தொடர்பாக துருக்கியுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
குறைந்த ஊதியத்தில், தற்காலிக பணியாளர்களாக சுமார் 710,000 துருக்கியர்கள் ஜேர்மனிக்கு பணிக்கு வந்தார்கள். 1973ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் பிரச்சினை ஏற்பட்டபோது ஆயிரக்கணக்கானோர் துருக்கிக்கு திரும்ப, பலர் தங்கள் குடும்பங்களை துருக்கியிலிருந்து வரவழைத்து ஜேர்மனியிலேயே தங்கிவிட்டார்கள்.
துருக்கியிலிருந்தும், மற்ற நாடுகளிலிருந்தும் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த மக்கள் ஜேர்மனி பொருளாதார சீதியாக வலிமையாகவும், செழிப்பாகவும் மாறுவதற்கு பெருமளவில் பங்களித்துள்ளார்கள் என்கிறார் ஜேர்மன் ஜனாதிபதியான Frank-Walter Steinmeie.
புலம்பெயர்ந்தோர் மத்தியில் பேசிய அவர், நீங்கள் புலம்பெயர்ந்த பின்னணி கொண்டவர்கள் என்று நான் சொல்லமாட்டேன், அதற்கு பதிலாக எங்கள் நாடாகிய ஜேர்மனி புலம்பெயர்தல் பின்னணி கொண்ட நாடு என்பேன் என்றார்.
அந்த காலகட்டத்தில் மொழி வகுப்புகள், ஆதரவு, ஒருங்கிணைப்புக் கொள்கைகள் என எதுவும் இல்லாத நிலையில், அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு நமது சமூகத்துக்கு நீண்ட காலம் பிடித்தது என்று கூறும் Frank-Walter Steinmeier, பிற நாட்டவர்கள் மீதான வெறுப்பு நம் நாட்டில் சகித்துக்கொள்ள இயலாதது என்றார்.
ஜேர்மனி எப்படி மத நம்பிக்கையற்றவர்களை ஏற்றுக்கொள்கிறதோ, அதேபோல இஸ்லாமியர்களும் நம் நாட்டின் அங்கம் என்று கூறிய Frank-Walter Steinmeier, இது உங்கள் நாடு என்று கூறினால், இங்கு பல்வேறு நம்பிக்கைகளுக்கும் இடம் உண்டு என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.