கனடாவில் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்கள்: பொலிசார் மீது வழக்கு
கனடாவில் வாழும் தங்கள் பிள்ளைகளைக் காண்பதற்காக சென்ற இந்திய தம்பதியர் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்டதற்காக பொலிசார் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர் அவர்களுடைய பிள்ளைகள்.
தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்கள்
2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இந்தியர்களான ஜக்தார் சித்துவும் (57) ஹர்பஜன் சித்துவும் (55), கனடாவின் ஒன்ராறியோவில் வாழும் தங்கள் பிள்ளைகளான ஜஸ்பிரீத் சிங் சித்துவையும் (31), குர்தீப் சிங் சித்துவையும் (29) காண்பதற்காக கனடா வந்துள்ளார்கள்.

அவர்கள் ஒன்ராறியோவிலுள்ள வீடொன்றில் தங்கள் பிள்ளைகளுடன் தங்கியிருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் சித்து குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
ஜக்தார் சித்துவும், ஹர்பஜன் சித்துவும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, அவர்களுடைய மகளான ஜஸ்பிரீத் மீது 13 குண்டுகள் பாய்ந்தன.
18 மணி நேர அறுவை சிகிச்சைக்குப்பின் பல மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரீத் அனுபவித்த, அனுபவித்துவரும் துன்பங்கள் ஏராளம். ஜஸ்பிரீத்தின் தோள் முதல் கால்கள் வரை கால்கள் வரை குண்டுகள் பாய்ந்திருந்தன.
அவரது தொண்டையில் குண்டு பாய்ந்ததால் சிறிது காலம் பேசும் திறனை இழந்திருக்கிறார் ஜஸ்பிரீத். ஒரு குண்டு, முதுகுத்தண்டின் அருகே சிக்கிக்கொண்டுள்ளதால், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றமுடியாத நிலை உள்ளது.
தாக்குதல்தாரிகள் யார்?
விடயம் என்னவென்றால், போதைப்பொருள் விடயம் தொடர்பில் இரண்டு கும்பல்களுக்கு இடையில் இருந்த பகை காரணமாக, ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் தவறுதலாக சித்து குடும்பத்தினரை சுட்டுவிட்டார்கள்.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், சம்பவம் நடப்பதற்கு நான்கு நாட்கள் முன் பொலிசார் சித்து குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டுக்கு வந்துள்ளார்கள்.

அங்கு ‘பாபி’ என்னும் பெயர் கொண்ட ஒருவர் தங்கியிருக்கிறாரா என பொலிசார் விசாரிக்க, அப்படி யாரும் இல்லை என்று கூறியுள்ளார்கள் சித்து தம்பதியர்.
பொலிசார் வந்து சென்ற நான்கு நாட்களுக்குப் பிறகு, மர்ம நபர்கள் வந்து சித்து குடும்பத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சித்து தம்பதியர் உயிரிழந்துவிட்டார்கள்.
இழப்பீடு கோரி வழக்கு
இந்நிலையில், பெற்றோரை இழந்த ஜஸ்பிரீத் சிங் சித்துவும், குர்தீப் சிங் சித்துவும், பீல் பிராந்திய காவல்துறை மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.
பொலிசார் தங்கள் வீட்டுக்கு வந்து பாபி என்னும் நபர் குறித்து விசாரித்தபோது, எப்படி பாபி அங்கு இருப்பார் என பொலிசார் எண்ணினார்களோ, அதேபோல் எண்ணித்தான் அந்த பாபியின் எதிராளிகள் வந்து அந்த வீட்டில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்கள்.
ஆக, அன்று பாபி என்னும் நபரைத் தேடி தங்கள் வீட்டுக்கு வந்த பொலிசார், அந்த வீட்டிலிருப்பவர்களுக்கு உயிருக்கு ஆபத்து உள்ளது என எச்சரித்திருந்தால், தங்கள் பெற்றோர் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள் என பிள்ளைகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
13 குண்டுகள் உடலில் பாய்ந்ததால் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கும் ஜஸ்பிரீத் இன்னமும் வலியும் வேதனையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.
ஆகவே, தங்கள் பெற்றோரின் உயிரிழப்பைத் தடுக்க வாய்ப்பிருந்தும் அதைத் தடுக்கத் தவறிய பொலிசார், தங்களுக்கு 80 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி ஜஸ்பிரீத் சிங் சித்துவும், குர்தீப் சிங் சித்துவும், பீல் பிராந்திய காவல்துறை மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |