சுவிஸ் பள்ளிகளில் வெளிநாட்டு பிள்ளைகளுக்கு இடம் கிடையாது: நீதிமன்றத்தின் முடிவு
பள்ளிகளில் வெளிநாட்டுப் பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பில் சுவிஸ் மாகாணமொன்று எடுத்துள்ள முடிவுக்கு ஆதரவாக நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுவிஸ் மாகாணமொன்றின் முடிவு
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் சுமார் 2,500 பேர் ஜெனீவா மாகாணத்தில் வாழ்பவர்கள் அல்ல.
உண்மையில், அவர்களில் பெரும்பாலானோர் பிரான்சிலிருந்து வந்து ஜெனீவாவில் படிப்பவர்கள்.
இந்நிலையில், பள்ளிகளுக்கு வேலைப்பழு அதிகம் இருப்பதாகவும், கடும் அழுத்தம் உருவாகியுள்ளதாகவும் கூறி, அடுத்த ஆண்டிலிருந்து ஜெனீவாவுக்கு வெளியே இருந்து வரும் மாணவ மாணவியரை ஜெனீவா பள்ளிகளில் சேர்ப்பதில்லை என ஜெனீவா மாகாண கவுன்சில் முடிவு செய்துள்ளது.

விடயம் என்னவென்றால், இந்த முடிவால், தற்போது ஜெனீவாவில் படிக்கும் வேறு இடங்களைச் சேர்ந்த பிள்ளைகள் சுமார் 1,000 பேர், அடுத்த ஆண்டிலிருந்து வேறு பள்ளிகளில் படிக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஜெனீவாவின் இந்த முடிவை எதிர்த்து பல குடும்பங்கள் அரசியல் சாசன நீதிமன்றத்தை அணுகின.
இதற்கிடையில், ஜெனீவாவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் பிள்ளைகளை அடுத்த ஆண்டில் பள்ளிகளில் சேர்க்க பிரான்ஸ் பள்ளிகளில் போதுமான இடம் இருக்காது என்பதால், பிரான்ஸ் கல்வித்துறை அதிகாரிகளையும் ஜெனீவாவின் முடிவு கோபமடையச் செய்துள்ளது.
நீதிமன்றத்தின் முடிவு
இந்நிலையில், அரசியல் சாசன நீதிமன்றம், ஜெனீவா மாகாண கவுன்சிலுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.
அதாவது, ஜெனீவா மாகாண கவுன்சிலின் முடிவு சட்டப்படியானதே என்று கூறி, பிரான்ஸ் பிள்ளைகள் ஜெனீவாவில் படிக்க அனுமதி இல்லை என்னும் ஜெனீவா மாகாண கவுன்சிலின் முடிவை மாற்ற முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனால் இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் பதற்றம் உருவாக, அடுத்த வாரம் இருதரப்பு அதிகாரிகளும் இந்த விடயம் தொடர்பில் சந்தித்துப் பேச இருக்கிறார்கள்.
ஆனால், ஜெனீவா மாகாண கவுன்சிலின் முடிவில் மாற்றம் இருக்குமா என்பது தெரியவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |