பிரித்தானியாவில் மந்தை நோயெதிர்ப்பு சக்தி வந்துவிட்டது... மூத்த அமைச்சர்
பிரித்தானியாவில் மந்தை நோயெதிர்ப்பு சக்தி வந்துவிட்டது என்கிறார் மூத்த பிரித்தானிய அமைச்சர் ஒருவர். பிரித்தானியாவில் கடந்த ஏழு நாட்களாக கொரோனா இறங்குமுகத்தில் உள்ளது.
கடந்த வாரத்தை ஒப்பிடும்போது, கொரோனா தொற்றின் அளவு இன்று பாதியளவே உள்ளது. தொழிலகங்கள் பாதிக்கப்பட்டு, பல்பொருள் அங்காடிகள் காலியாகும் நிலைமைக்கு காரணமான தனிமைப்படுத்தல் விதிகளை உடனடியாக விலக்கிக்கொள்ளவேண்டும் என்று நேற்று இரவு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் போரிஸ் ஜான்சனை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்கள்.
இதற்கிடையில், ஏற்கனவே தடுப்பூசி திட்டமும், 5.7 மில்லியன் பேருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றும் சேர்ந்து மக்களை கொரோனாவை எதிர்கொள்ளவைத்துவிட்டதால், இப்போது கொரோனா வைரஸுக்கு தொற்றுவதற்கு ஆள் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார் மூத்த அமைச்சர் ஒருவர்.
அத்துடன், நம் நாட்டில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது பெற்றுக்கொண்ட நிலையில், பிரித்தானியாவில் மந்தை நோயெதிர்ப்பு சக்தி வந்துவிட்டது என்கிறார் அவர்.
இப்போது புதிதாக ஏதாவது திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உருவானால், நாம் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் அவ்வளவுதான்.
மற்றபடி நம்முடன் வாழும் ஒரு விடயமாக கொரோனாவும் ஆகிவிட்டது என்று கூறும் அவர், இனி அது பெரிய அளவில் எதையும் மாற்றப்போவதில்லை, வேண்டுமானால் எப்போதாவது ஒரு கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டியிருக்கும் என்கிறார்.