பிரித்தானியாவில் கொரோனா இறப்பு வீதம் 16 மடங்கு குறைந்துள்ளது: ஆறுதலளிக்கும் ஒரு செய்தி
பிரித்தானியாவில் தற்போது நாளொன்றிற்கு 45,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் சராசரியாக 40 பேர் கொரோனாவுக்கு பலியாகிறார்கள்.
கேட்பதற்கு அதிர்ச்சியளிக்கும் தகவலாகத்தான் இது தோன்றுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால், கடந்த டிசம்பரில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசியபோது நாளொன்றிற்கு 640 பேர் பலியானார்கள்.
அப்படி பார்த்தால், இப்போது இறப்பு வீதம் 16 மடங்கு குறைந்துள்ளது. அத்துடன், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த அலையை ஒப்பிடும்போது, நான்கு மடங்கு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியன்று 50,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டபோது, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,800. இப்போது அது வெறும் 614 மட்டுமே. கொரோனாவால் உயிரிழப்போரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரும் இருந்தாலும், இப்போதைய தொற்று, முதல் மற்றும் இரண்டாவது அலைகளின்போது மருத்துவமனைகளுக்கு கொடுத்த அழுத்தம் போல் இம்முறை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரில் பெரும்பாலானோரும் இளைஞர்கள் மற்றும் தடுப்பூசி பெற்றவர்கள்தான்.
அதாவது நோய் மிதமாகத்தான் உள்ளது என்பதையே இது காட்டுகிறது, அத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கால அளவும் முந்தைய அலைகளை விட குறைந்துள்ளது. பிரித்தானியாவின் தடுப்பூசி திட்டத்தின் வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் நல்ல செய்திதான்!