அனைத்து கொரோனா விதிகளும் மொத்தமாக நீக்கம்: எப்போது முதல் என அறிவித்த பிரித்தானிய அரசு
பிரித்தானியாவில் ஓமிக்ரான் பரவல் கட்டுக்குள் வருவதை பொறுத்து, அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் மார்ச் மாதத்தில் இருந்து நீக்கப்படுவதாக போரிஸ் அரசு குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது அமுலில் இருக்கும் திட்டம் பி எதிர்வரும் 26ம் திகதி காலாவதியாகிறது. அதாவது குடியிருப்பில் இருந்தே பணியாற்றுவது, தடுப்பூசி கடவுச்சீட்டு உள்ளிட்டவைகள் அடுத்த வாரத்தில் முடிவுக்கு வருகிறது.
இதனையடுத்து, அடுத்த வாரம் முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமின்றி, கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு, அனைத்து கொரோனா விதிகளையும் மார்ச் மாதத்தில் இருந்து நீக்கவும் பிரித்தானிய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கொரோனா விதிமீறலுக்கான 10,000 பவுண்டுகள் அபராதமும் ரத்து செய்ய அமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மட்டுமின்றி, சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கை கூட, வழிகாட்டுதல்களுடன் நீக்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.
ஜனவரி தொடக்கத்தில் நாளும் 200,000 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது கடந்த நான்கு நாட்களில் அந்த எண்ணிக்கை 100,000 என சரிவடைந்துள்ளது.
தற்போது வெளியாகும் தரவுகள் நம்பிக்கை அளிப்பதாகவும், ஆண்டு இறுதியில் கொரோனா தொற்றையும் வெறும் ஒரு குளிர் காய்ச்சல் போன்றே அணுகும் நிலை ஏற்படும் என பிரித்தானிய நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொற்று பரவல் கட்டுக்குள் வந்துவிடும் என இப்போதே தம்மால் கணிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், தெரியவரும் தரவுகள் நம்பிக்கை அளிப்பதாகவும், பள்ளிகள் திறக்கும் போது மீண்டும் ஒரு அலை ஏற்படாமல் இருந்தால் நாம் தப்பித்துவிடலாம் என்றார்.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் கடுமையான ஒரு சூழல் உருவாகும் என பயந்திருந்த நிலையில், தற்போது நாடு இக்கட்டான நிலையை கடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.