உட்கார்ந்த நிலையில் இறந்துபோன கொரோனா நோயாளி! நெஞ்சை உருக்கும் பரிதாப சம்பவம்
இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உட்கார்ந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரிதாப அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம், ஜகல்பூரி நகரத்தில் கடந்த செவ்வாய்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 52 வயதான நபர், பிஸ்வபங்கலா கிரிரங்கனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அந்த மாவட்டத்திற்கே உள்ள ஒரே ஒரு கோவிட் சிகிச்சை மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரமாக பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட அந்த நபருக்கு ஆக்சிஜன் உதவி கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அன்று அவரை அனுமதிக்கப்பட்ட பிறகு இரவு வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர், மறுநாள் (புதன்கிழமை) காலை அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
அப்போது, அவர் தனது படுக்கையில் உட்கார்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அருகில் சென்று பார்த்தபோது பேச்சுமூச்சு இல்லாமல் இருப்பதை அறிந்து அங்கிருந்த மருத்துவரை அழைத்துள்ளனர்.
ஒரு மருத்துவர் மற்றும் ஒரு நர்ஸ் வந்து அவரை சோதித்து பார்த்து, அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து, அவர் இறந்ததற்கு மருத்துவமனையின் அலட்சியம் தான் காரணம் என அவரது உறவினர்கள் மருத்துவமனை வாசலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த பொலிஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் எந்தவித தகவலும் பதிலும் கொடுக்கப்படவில்லை.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உட்கார்ந்தபடி ஒருவர் இறந்துபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.